ஆக்சிஜன் சப்ளை நின்றதால் டெல்லி மருத்துவமனையில் 4 நோயாளிகள் மரணம்
டெல்லி: டெல்லியில் தலைக்காய சிகிச்சை பிரிவு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சப்ளை திடீரென்று நின்று போனதால் ஐசியு வார்டில் இருந்த நான்கு நோயாளிகள் மரணமடைந்தனர்.
வடக்கு டெல்லியில் உள்ள சுஸ்ருதா மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1998 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் விபத்து காய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. செவ்வாய்கிழமையன்று இந்த மருத்துவமனையின் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு 30 நிமிடங்கள் ஆக்சிஜன் திடீரென்று நின்று போனது. இதில் அந்த அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 நோயாளிகள் உயிருக்குப் போராடினர். ஆக்சிஜன் சப்ளை கிடைக்காமல் நான்கு நோயாளிகள் மரணமடைந்தனர்.
நிர்வாகத்தின் அலட்சிய பதில்
இந்த துயர சம்பவம் பற்றி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். மருத்துவமனையின் கண்காணிப்பாளரான டாக்டர் ரிச்சா தீவான், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்த இடத்தில் பயிற்சி இல்லாத ஒரு நபர் இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது. திங்கட்கிழமையன்று மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை செய்யும் இடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அதுவும் அவருக்கு இதுபற்றி சரியான பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனையில் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
மாநில சுகாதாரத்துறை விசாரணை
இது பொய்யான தகவல் என்றும் இதுபோன்று பலமுறை இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை தடைபட்டு நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து விழித்துக்கொண்டுள்ள மாநில மருத்துவத்துறை இதுகுறித்து விளக்கம் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.கே. வாலியா, மருத்துவமனையின் ஆக்சிஜன் சப்ளை பிரிவு உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தவிட்டுள்ளார். மேலும் நோயாளிகளின் மரணம் குறித்து விசாரணை நடத்த மூவர் அடங்கிய குழு ஒன்றையும் நியமித்துள்ளார். இந்த குழு மூன்று நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications