பேராசை பிடித்த கெஜ்ரிவாலின் கட்சிக்கு ஓட்டு போடவே மாட்டேன்: ஹசாரே
பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேட்டியளித்தார். அப்போது அவரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் பேராசைப் பிடித்தவரா என்று கேட்டதற்கு, ஆமாம் என்றார். கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன் என்று தான் நினைத்தேன். ஆனால் அக்கட்சி பதவி மூலம் பணம், பணம் மூலம் பதவி என்ற பாதையில் செல்கிறது. அதனால் அவர்கள் பக்கமே போக மாட்டேன்.
கெஜ்ரிவால் சுயநலமில்லா சேவை செய்பவர் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு பதவி மீது எப்பொழுது பேராசை வந்தது என்று தெரியவில்லை. அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்படி வந்தது என்றே புரியவில்லை. கெஜ்ரிவாலின் அரசியல் ஆசையால் தான் அன்னா குழு உடைந்தது.
குஜராத்தில் ஊழல் பெருகிவிட்டது. முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி மாநிலத்தில் இதுவரை லோக் ஆயுக்தா மசோதாவை கொண்டு வரவில்லை. அவர் ஏன் மசோதாவை கொண்டு வர மாட்டேன் என்கிறார்? எல்லோரும் பதவியை வைத்து பணம் பார்க்கிறார்கள் என்றார்.