சப்பாத்தி கேட்டு சுவர் மீது ஏறி நின்று கைதிகள் தற்கொலை மிரட்டல்: சேலம் சிறையில் பரபரப்பு
சேலம்: சேலம் மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தங்களுக்கு சப்பாத்தி வழங்க வேண்டும் என்று கூறி சுவர் மீது ஏறி நின்று தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 7 பேர் நேற்று இரவு சமையலறைக்கு சென்றனர். அங்கு அவர்கள் சப்பாத்தி செய்யத் தேவையான பொருட்களை பயன்படுத்தி சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பக்கம் வந்த ஜெயிலர், சமையலறையில் சிலர் சப்பாத்தி சுடுவதைப் பார்த்து உள்ளே நுழைந்தார்.
இந்த பொருட்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்ட அவர் அவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டார். இதனால் சப்பாத்தி சாப்பிட முடியவில்லையே என்று அந்த 7 கைதிகளும் வருந்தினர். இதையடுத்து இன்று காலை அவர்கள் சிறையின் மதில் சுவர் மீது ஏறி நின்று தங்களிடம் இருந்து பறிமுதல் செய்த பொருட்களை திருப்பித் தருமாறு கூறினர். இல்லை என்றால் சுவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டினர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications