போலீசாரை தாக்கிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற வாரண்ட் கைதி
நெல்லை: நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து போலீசார் இருவரை தாக்கிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற வாராண்ட் கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசாமி கடந்த 2009ம் ஆண்டு அவரது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி நாங்குநேரி அருகே உள்ள வருகால்கு்றிச்சியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பிச்சாண்டி, மேலநத்தத்தைச் சேர்ந்த கலைச்செல்வன், இசக்கிதுரை, பாபு, நம்பிராஜன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளி வந்தனர்.
இவ்வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது பிச்சாண்டி தவிர மற்றவர்கள் ஆஜராகி வந்தனர். இதனால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என மேலப்பாளையம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மேலப்பாளையம் எஸ்.ஐ. பலவேசம் தலைமையிலான போலீசார் பிச்சாண்டியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்.ஐ. பலவேசம் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த பிச்சாண்டியை வழிமறித்தனர். ஆனால் அவர் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார்.
உடனே அவரை போலீசார் வாகனத்தில் துரத்திச் சென்றனர். இதற்கிடையே அவரை மடக்கிப் பிடிக்குமாறு மைக்கில் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகே பைக்கில் வேகமாக வந்த பிச்சாண்டியை இரண்டு போக்குவரத்து போலீசார் வழி மறித்தனர். ஆனால் அவர் அவர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். உடனே அங்கிருந்த ஹைவே பாட்ரோல் போலீசார் பிச்சாண்டியை துரத்திச் சென்றனர். ஆனால் அவர் நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெரு வழியாக தப்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications