சென்னையில் டிக்கெட் எடுக்கச் சொன்ன கண்டக்டரின் கையை ஒடித்த கல்லூரி மாணவர்கள்
சென்னை: சென்னையில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கக் கூறிய கண்டக்டரை கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கினர். இதில் அவரது கை ஒடிந்தது.
சென்னை அடையாறில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் சி51 எண் கொண்ட பேருந்து 10 கல்லூரி மாணவர்கள் உள்பட 50 பயணிகளுடன் இன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. பேருந்து பாலவாக்கத்தை அடுத்து உள்ள வெட்டுவாங்கேணி அருகே சென்றபோது கண்டக்டர் செல்வராஜ்(40) கல்லூரி மாணவர்களிடம் பாஸை காண்பிக்குமாறு கூறினார். மேலும் பாஸ் இல்லாதவர்கள் டிக்கெட் எடுங்கள் என்றார்.
டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அதற்கு கண்டக்டர், டிக்கெட் எடுக்கவில்லை என்றால் பேருந்தில் இருந்து இறங்கிவிடுங்கள் என்றார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவர்கள் கண்டக்டரை அடித்து நொறுக்கினர்.
இதைப் பார்த்த பிற பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர். டிரைவர் தனது சீட்டில் இருந்து எழுந்து வந்தபோது மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். மாணவர்கள் தாக்கியதில் செல்வராஜின் கை எலும்பு முறிந்தது. அதன் பிறகு அவரை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்
முன்னதாக கண்டக்டர் செல்வராஜ் இந்த சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 10 மாணவர்களை தேடி வருகின்றனர்.