விஜயகாந்த் மீது அவதூறு வழக்காக போட்டுத்தாக்கும் தமிழக அரசு

நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்
நாமக்கல்லில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசினார் என்பது புகார்.
இதற்காக அரசு வழக்கறிஞர் தன்சேகரன் நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊட்டிக்கு போன விஜயகாந்த்
ஊட்டியில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக நீலகிரி மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் அனந்தகிருஷ்ணன் ஊட்டி நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து ஊட்டி நீதிமன்றத்திலும் ஆஜரானார் விஜயகாந்த்.
தஞ்சையில் ஆஜராகவில்லை
தஞ்சை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தஞ்சையில் கடந்த 10.8.2012 அன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும், தமிழக அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் குப்புசாமி வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் டிசம்பர் 11ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் விஜயகாந்த் ஆஜராகவில்லை.
அறிக்கை வெளியிட்டதற்கு சம்மன்
ஏற்கனவே அதிமுக ஆட்சி குறித்து அறிக்கை வெளியிட்டதற்காக விஜயகாந்த் மீதும் பாமக தலைவர் ராமதாஸ் மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு கடந்த அக்டோபர் மாதம் சம்மன் அனுப்பியது சென்னை செசன்ஸ் முதன்மை நீதிமன்றம்
மீண்டும் அவதூறு வழக்கு
கேப்டன் டிவியில் அக்டோபர் 26ம் பேட்டியளித்த விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்தார் என்று கூறப்படுகிறது. இந்த பேச்சு அடிப்படை ஆதாரமற்றது, உண்மைக்கு புறம்பானது என்று கூறி சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் ஜெகன் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது விஜயகாந்த் மீதான மற்றுமொரு அவதூறு வழக்காகும்.
கிரிமினல் சட்டப்படி தண்டனை
தமிழக அரசுக்கும், முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசிய விஜயகாந்தை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் வழக்கறிஞர்.
ஜனவரியில் தருமபுரி
இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் முனுசாமி மற்றும் அரசு நிர்வாகத்தை தரக்குறைவாகவும் அவதூறாகவும் விஜயகாந்த் பேசியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் மூலம் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வணங்காமுடி, விஜயகாந்த் வரும் 2013ம் வருடம் ஜனவரி 22ம் தேதி தருமபுரி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications