இலங்கையின் இன்றைய ’ஸ்பெஷல்’- இறால் மழை!
கொழும்பு: இலங்கையில் சிவப்பு மழை, மீன் மழை, விண்கல் மழை, மஞ்சள் மழை என்ற பட்டியலில் இறால் மழையும் இணைந்திருக்கிறது.
இலங்கையின் பல பகுதிகளும் அடைமழையால் வெள்ளக்காடாகி இருக்கிறது. இந்த மழைக்கு இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையில் நீடிக்கும் அசாதாரண நிலையால் தேசிய அவசரநிலைப் பிரகடனம் வெளியிட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இதனிடையே இலங்கையின் பல பகுதிகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலும் ஜெல் போன்ற திரவ வடிவிலும் மழை கொட்டியிருந்திருக்கிறது. மாத்தறை பகுதியில் மீன்மழையும் பெய்திருக்கிறது.
இந்நிலையில் இலங்கையின் திஸ்ஸ மஹாராம விகாரைப் பகுதியில் இன்று இறால் மழை பெய்திருப்பதாக இலங்கையின் ‘வீரகேசரி' நாளேட்டின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சூறாவளிக் காற்றோடு பெய்யும் மழையால் நீர்ப்பரப்பில் இருக்கும் மீன் மற்றும் இறால்கள் மேலிழுக்கப்பட்டு கொட்டப்படுவதால் இறால் மழைக்கான வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications