தமிழகக் கடற்பரப்பில் 4-வது நாளாக சீற்றம்- மீன்பிடித் தொழில் பாதிப்பு
சென்னை: தமிழகக் கடற்பரப்பில் 4-வது நாளாக சீற்றம் நீடித்து வருவதால் மீன்பிடித் தொழில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
தமிழக கடற்பரப்பில் கடந்த 4 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்கச் சென்றவர்களும் பாதியில் கரை திரும்பினர்.
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் திறக்கப்படாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நாகை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. கடல் சீற்றத்தால் ஏற்படும் ராட்சத அலைகளால் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கடலில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் விசைப்படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications