23ம் தேதி தேமுதிக சார்பில் சென்னையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை: தேமுதிக சார்பில் சென்னையில் வரும் 23ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த அறிவி்த்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிறிஸ்துவ மார்க்கம் உலகம் தழுவிய ஒரு சிறந்த மதமாக திகழ்கிறது. மாற்றார்களிடமும் அன்பு செலுத்தவும், மற்றவர்களுக்கும் உதவி புரிந்திடவும் வலியுறுத்துகிறது.
இத்தகைய நன்மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளையொட்டி கொண்டாடுவதே கிறிஸ்துமஸ் பண்டிகையாகும். ஏழை எளிய மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை ஆண்டுதோறும் செய்து வருகிறோம்.
கிறிஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணியளவில் தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். விழாவில் நானும் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக்குகளும், பிரியாணியும் வழங்கவுள்ளேன்.
இந்நிகழ்ச்சியில் பேராயர் எஸ்றா சற்குணம், பேராயர் ராஜாசிங், டாக்டர் ஆர்.டி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இந்த ஆண்டும் நமது இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் தங்களால் இயன்ற அளவிற்கு இனிப்பு மற்றும் கேக்குகள் வழங்கி கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications