அறிவாலயத்தில் நடந்த கம்யூ தலைவர் கோபு சிலை திறப்பு.. உருக்கமாக பேசிய கருணாநிதி

கருணாநிதி நிகழ்ச்சியி்ல் பேசுகையில்,
என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களில் ஒருவர் மறைந்த அருமை நண்பர் கோபு. கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உடன்பாடு, ஒற்றுமை, நேசம், நட்பு, தோழமை இவை எல்லாம் இருந்த காலத்திலும், இல்லாத காலத்திலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரும் நானும் அன்போடு பழகியவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் கோபுவுக்கு எந்த அளவிற்கு நெஞ்சார்ந்த தொடர்பு உண்டு என்பதை நான் மிக நன்றாக அறிவேன். ஆனாலும் அரசியல் பூசல்களின் காரணமாக அவர் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டியவரானார். அதன் காரணமாக இருவரும் அடிக்கடி சந்திக்கின்ற வாய்ப்பினைப் பெறாவிட்டாலும், கோபுவின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நான் வர வேண்டும், வந்து கலந்து கொள்ள வேண்டும், வாழ்த்த வேண்டும் என்று விரும்பக் கூடியவர்.
அப்படிப்பட்டவருடைய மறைவு என்னைப் பொறுத்தவரையிலே என்னை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிய ஒரு நிகழ்ச்சி. அவருடைய குடும்பத்தார் என் மீதும், என் தலைமையிலே உள்ள திமுகவின் மீதும் கொண்டுள்ள அன்பு ஒரு புறம் இருந்தாலும், அந்தக் குடும்பத்தின் பால் நான் கொண்டுள்ள பாச உணர்வு என்றும் பட்டுப்போகாத ஒன்று.
அந்தக் குடும்பத்தார் இன்று இந்த சிலை திறப்பு விழாவினைக்கூட வேறெங்கும் வைக்காமல், கழகக் கட்டிடத்திற்குள்ளேயே, அண்ணா அறிவாலயத்திற்குள்ளேயே நான் இருந்து நடத்த வேண்டும், நானே சிலையைத் திறந்து வைக்க வேண்டும் என்று விரும்பியதை, ஒரு கட்டளையாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி வைத்திருக்கிறேன்.
அந்தக் கொள்கை மாறாத தங்கம் - குறிக்கோள் வெற்றி அடைவதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யக் கூடிய சிங்கம் -கோபு இன்றைக்கு இல்லாவிட்டாலும் அவருடைய நினைவு நம்மையெல்லாம் வாழ வைக்கும், வாழ வைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்தச் சிலையினை நான் திறந்து வைத்திருக்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications