பொங்கல் பண்டிகை: பஸ்கள் அனைத்தும் ஃபுல், மேலும் சிறப்பு பஸ்கள் விட கோரிக்கை
நெல்லை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் அனைத்து பேருந்துகளிலும் காலை நேரத்தை தவிர வேறு நேரங்களில் ஒரு இருக்கை கூட காலி இல்லை.
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், சிறப்பு வசதிகளை செய்து தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 11ம் தேதி 1,280 சிறப்பு பேருந்துகளும், 12ம் தேதி 1,315 சிறப்பு பேருந்துகளும், 13ம் தேதி 312 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து 11ம் தேதி 730 சிறப்பு பேருந்துகளும், 12ம் தேதி 745 சிறப்பு பேருந்துகளும், 13ம் தேதி 1,230 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மொத்தத்தில் 5,612 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் 4 நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையினை கோலாகலமாக கொண்டாடிவிட்டு ஊர் திரும்ப வசதியாக இதே அளவிலான பேருந்துகளை வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கணினி முன்பதிவு மையம் பொங்கல் பண்டிகையையொட்டி 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதள பயணச்சீட்டு முன்பதிவு முறையின் அடிப்படையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தனது பணியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 10.1.13 முதல் வரும் 20.1.13 வரை தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழிற்சங்க தலைவர்கள் முன்வந்து தங்களது வாராந்திர விடுப்புகளையும், ஓய்வு நாட்களையும் மாற்றியமைத்து சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், விடுப்புகளை பின் தேதியில் ஈடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கால தாமதத்துடன் சிறப்பு பேருந்துகளை அரசு அறிவித்துள்ளதால் ஏற்கனவே தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஆனாலும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் அனைத்து பேருந்துகளிலும் காலையை தவிர வேறு நேரங்களில் ஒரு இருக்கை கூட காலி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications