திருப்பூரில் ஆர்டர் நிறைய இருக்கு! ஊருக்கு போனதொழிலாளர்கள் எப்போ வருவாங்க?

டாலர் சிட்டி என்றழைக்கப்படும் திருப்பூரில் நூற்றுக்கணக்கான பின்னலாடை தொழிற்சாலைகளும், அதுசார்ந்த உபதொழிற்சாலைகளும் அதிகம் உள்ளன. ஆண்டுக்கு 12000 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டித்தரும் இந்த நகரில் மதுரை, தேனி, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் வந்து தங்கி வேலை பார்க்கின்றனர்.
ஆண்டு முழுவதும் திருப்பூரில் உழைக்கும் இத்தொழிலாளர்கள், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை ஒட்டி தங்கள் சொந்த ஊருக்குச் சென்று ஒருவார காலம் வரை தங்கிவிட்டு வருவது வழக்கம். இந்த சமயத்தில்தான் மகன், மகள் திருமண ஏற்பாடு, உறவினர்களைச் சந்திப்பது, வீடுகளை பராமரிப்பது போன்ற சொந்த வேலைகளை கவனித்துவிட்டு பின்னர் திருப்பூர் திரும்புவார்கள். ஒரு சிலர் விவசாய வேலை இருந்தால் சொந்த ஊரிலேயே தங்கிவிடுவதும் உண்டு.
3 லட்சம் தொழிலாளர்கள்
திருப்பூரில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினை, சாயப்பட்டறை பிரச்சினையினால் தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் சென்ற பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பவில்லை. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த சனிக்கிழமையன்று திருப்பூரில் இருந்து 3 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.
இதனால் எப்பொழுதும் பரபரப்பாகக் காணப்படும் திருப்பூர் மாநகர வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் வரும் திங்கட்கிழமையன்று திருப்பூர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த தினங்களில் படிப்படியாக மீதமுள்ள தொழிலாளர்கள் வந்து சேர்வார்கள்.
ஆர்டர் அதிகரிப்பு
திருப்பூரில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது உள்நாட்டு வர்த்தகத்திலும் ஈடுபடத் துவங்கியுள்ளன. உள்நாட்டு வர்த்தக பனியன் நிறுவனங்களுக்கு குஜராத், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபார ஆர்டர்கள் அதிக அளவில் வந்திருப்பதாகவும், தொழிலாளர்கள் வருகைக்காகக் காத்திருப்பதாகவும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
திங்கட்கிழமை திரும்பலாம்!
திருப்பூர் தொழில்துறை, உள்நாட்டு பனியன் வர்த்தகம், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் என இருவிதமான நிலைகளில் இயங்கி வருகிறது. உள்நாட்டு வர்த்தகம் சீராக இருப்பதால், அதைச் சார்ந்த தொழிலாளர்களும், அதன் உப தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் என 1.5 லட்சம் தொழிலாளர்கள் உடனடியாக திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது.
பொய்த்துப்போன பருவமழை
மழை பெய்யாத காரணத்தால் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு, வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் விரைவில் திருப்பூர் திரும்புவார்கள் என்று தொழில் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
ஏற்றுமதி ஆர்டர்கள்
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இஸ்ரேஸ் நாடுகளில் இருந்து பின்னலாடை வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைத்திருப்பதால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் தேக்க நிலையில் இருந்து மீண்டு வருவதாக பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே திருப்பூரை வாழ்விடமாகக் கொண்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் சில தினங்களில் திருப்பூர் வந்தடைய வாய்ப்பு உள்ளது. வியாழக்கிழமை முதல் பனியன் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பெரிய நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் சொந்த ஊருக்கு பேருந்துகளை அனுப்பி அவர்களை அழைத்துவரவும் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications