'தெலுங்கானா' : ஏமாற்றிய மத்திய அரசு- ஹைதராபாத்தில் தொடர் போராட்டம்!
ஹைதராபாத்; தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை உதயமாகிவிடும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போன விரக்தியால் ஹைதரபாத்தில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன.
தெலுங்கானா தனி மாநிலம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று இரவே தெலுங்கானா தனி மாநிலம் குறித்து முடிவெடுக்க தாமதமாகும் என்று அறிவித்துவிட்டது. இதனால் நேற்று காலை முதல் ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர்.
தெலுங்கானா ஆதரவாளர்களின் போராட்ட களமாக இந்திரா பூங்கா மாறியுள்ளது. இன்று காலையும் இந்திரா பூங்காவில் கூடிய தெலுங்கானா போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
காங்கிரஸார் முற்றுகை
இந்நிலையில் இந்திரா பூங்காவில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள் சென்றனர். ஆனால் அவர்களை போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டு கெரோ செய்தனர். முதலில் காங்கிரஸைவிட்டு வெளியேறுங்கள்! பின்னர் தெலுங்கானா போராட்டத்துக்கு வாருங்கள்!! என்று முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பும் பதற்றமும் உருவானது.
நாளை பந்த்
இதனிடையே தெலுங்கானா பகுதியில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்த உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தெலுங்கானா போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள். மாணவர்களின் இந்த அழைப்பைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தெலுங்கானாவில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications