லஞ்ச வழக்கு: ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி எம்.டியிடம் சிபிஐ விசாரணை
சென்னை: பல் மருத்துவ மேல் படிப்புக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீலேகாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 7ம் தேதி இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினரான முருகேசனுக்கு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் பல் மருத்துவக்கல்லூரியின் நிர்வாகிகள் 3 பேர் லஞ்சம் வழங்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவர்களை கையும் களவுமாக பிடித்த சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் லஞ்சம் வழங்கிய விவகாரத்தில் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஸ்ரீலேகாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த சிபிஐ அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பினர். சம்மனை ஏற்றுக் கொள்ளாத ஸ்ரீலேகா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதன் படி இன்று காலை 7 மணிக்கு நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் ஆஜரான ஸ்ரீலேகாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியை சேர்ந்த பல் மருத்துவ கவுன்சில் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இந்த முறைகேடு தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சிலின் மற்றொரு உறுப்பினரான டாக்டர் குணசீலனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாடுமுழுவதும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்த கடந்த 4 நாட்களுக்கு முன்பு தேசிய அளவில் 8 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 கல்லூரிகளும் அடங்கும்.












Click it and Unblock the Notifications