சென்னையில் 'இறந்து' பெங்களுரில் உயிருடன் வசிக்கும் நபர்!
திருவனந்தபுரம்: சென்னையில் மர்மமான முறையில் இறந்த கேரள வாலிபர் பெங்களுரில் உயிருடன் இருப்பதாக தெரிந்த தகவலை அடுத்து பெற்றோர் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் முகமது ஹாரிஸ். கடந்த ஜனவரி மாதம் வேலை தேடி சென்னை சென்றார். அங்கு ஒரு அறை எடுத்து தங்கிய அவர் குளித்து விட்டு ஹோட்டலை விட்டு வெளியே சென்று பின் திரும்பவில்லை. ஹாரிஸ் காணாமல் போன விபரத்தை ஹோட்டல் ஊழியர்கள் அவருடைய பெற்றோருக்கு தெரிவித்தனர். இதற்கிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கூவம் நதிக்கரையில் வாலிபர் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது ஹாரிஸ் உடல்தான் என உறவினர்கள் அடையாளம் காட்டினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் ஹாரிஸ் பெங்களுரில் வசித்து வருவதாக அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. பெங்களுரில் உள்ள மலையாள ஜமாத்தினர் இது தொடர்பான தகவலை பொன்னாணி போலீசாருக்கு தெரிவித்தனர். ஹாரிஸ் உயிருடன் இருக்கம் புகைப்படத்தை இமெயிலில் அனுப்பினர். இதனையடுத்து அது ஹாரிஸ் தான் என பெற்றோர் உறுதி செய்தனர். அவரை அழைத்து வர பெங்களுரு புறப்பட்டு சென்றனர்.
ஹரீஸ் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளதால் சென்னையில் மர்மமான முறையில் இறந்து போய் அடக்கம் செய்யப்பட்ட வாலிபர் உடல் யாருடையது என்ற கேள்வி எழுந்துள்ளது.