நல்ல படமாக எடுங்கள், சர்ச்சையெல்லாம் வேண்டாம்.. விஸ்வரூபம் குறித்து மதுரை ஆதீனம்
தஞ்சாவூர்: திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கலைஞர்களை அன்புடன் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் நல்ல படத்தை எடுங்கள். எந்த சமய நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் எந்த படத்தையும் எடுக்க வேண்டாம். இதனால் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்.
தஞ்சை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோவில் மதுரை ஆதீனத்தை நிறுவிய திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம். அப்பருக்கு கயிலைக்காட்சி அளித்த தலம். பஞ்சநதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடக்கிறது. இந்த குடமுழுக்கில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை எந்த காரணத்தை முன்னிட்டும் இந்தியாவிற்குள் வர அனுமதிக்கக்கூடாது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அவரை இந்தியாவிற்கு அழைப்பது தமிழர்களுக்கு செய்யும் தீங்காகும். துரோகமாகும்.
இப்போது கூட அங்கே(இலங்கை) தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. தமிழர்களுக்கு துரோகம் செய்த ராஜபக்சே திருப்பதிக்கு வருவது நல்லது அல்ல.
இலங்கையில் நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை இடித்த ராஜபக்சே மனசாட்சிக்கு விரோதமாக இந்தியாவிற்கு வருவதை வரவேற்பதையும், அவரை தரிசனம் செய்ய அனுமதிப்பதையும் தமிழர்கள் மனது ஏற்றுக் கொள்ளாது. ஆண்டவன் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார். ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
காவிரி பிரச்சினையில் மிக சிறப்பான வகையில் சரியான நடவடிக்கை எடுத்த முதல்வரை பாராட்டுகிறேன். காவிரி நடுவர் மன்றம், காவிரி கண்காணிப்புக்குழு, பிரதமர், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.
தண்ணீரானது இறைவன் மக்களுக்கு கொடுத்த பரிசு. பயிர், மரம், தானியங்கள் எல்லாவற்றுக்கும் தண்ணீர் ஆதாரம் முக்கியம். கர்நாடகமாக இருந்தாலும், கேரளாவாக இருந்தாலும் சரி தண்ணீர் என்பது பொதுவான சொத்து.
அந்த சொத்தை கொடுக்க மறுப்பது வேதனை அளிக்கிறது. தண்ணீர் இன்றி காவிரிடெல்டா மக்கள் வாடி, வதங்கியுள்ளனர். இந்த பாவம் அவர்களை(கர்நாடகம்) சும்மாவிடாது.
திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கலைஞர்களை அன்புடன் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் நல்ல படத்தை எடுங்கள். எந்த சமய நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் எந்த படத்தையும் எடுக்க வேண்டாம். இதனால் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது. விஸ்வரூபம் படத்தால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. ஆதிபகவான் படத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக பத்திரிகை செய்தி மூலம் அறிந்தேன்.
மதுரை ஆதீனத்திற்கு இளையஆதீனமாக யாரையும் இப்போதைக்கு நியமிக்கவில்லை. அதற்கு காலம் இருக்கிறது. உங்களுக்கு(பத்திரிகையாளர்கள்) தெரியாமல் இளையஆதீனத்தை அறிவிக்கமாட்டேன்.
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கும்பகோணம் திருப்புறம்பியம் கோவில் நிலத்திற்கு ரூ.ஒன்றரை கோடி குத்தகை பாக்கி உள்ளது. நவக்கிரக கோவில்களில் ஒன்றான கஞ்சனூர் கோவில் நிலத்திற்கு ரூ.ஒன்றரை கோடி குத்தகை பாக்கியும், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் கோவில் நிலத்திற்கு ரூ.ஒன்றரை கோடியும், பண்ணத்தெருவில் உள்ள பண்ணகா பரமேஸ்வரர் கோவில் நிலத்திற்கு ரூ.ஒன்றரை கோடியும் குத்தகை பாக்கி உள்ளது.
இந்த ரூ.6 கோடியை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வசூல் செய்து கொடுத்தால் அந்தந்த கோவில்களுக்கு திருப்பணி செய்ய வசதியாக இருக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications