சட்டசபையில் நடந்த 'தேமுதிக சண்டை'- நடந்தது என்ன?: அமைதியாக வெளியேறிய பண்ருட்டி...!
சென்னை: சட்டசபையில் இன்று தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும், அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டு அத்தனை பேரும் பரபரப்பாகி விட்டனர்.
சட்டசபையில் சண்டை நடப்பது புதிதல்லதான். இருந்தாலும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் அடித்துக் கொண்ட செயல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று நடந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தேமுதிகவைச் சேர்ந்த திட்டக்குடி எம்.எல்.ஏ தமிழழகனின் பேச்சுதான் பிரச்சினைக்குக் காரணம். அவர் பேசியதற்குப் பின்னர்தான் மோதல் வெடித்தது.
அடுத்து நடந்தவை குறித்த ஒரு காட்சி விவரிப்பு...

அனைவரும் எழுந்து எதிர்ப்பு
தமிழழகன் பேசியபோது தேமுதிக எம்.எல்.ஏக்கள் மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து தமிழழகன் பேச முயன்றபோது சிலர் எழுந்து அவரை நோக்கி ஓடினர்.

ஏதோ சொல்லித் திட்டினர்
அப்போது சில எம்.எல்.ஏக்கள் சத்தமாக ஏதோ சில வார்த்தைகளை சொல்லியபடி ஓடினர்.

சந்திரகுமாருக்கும், மைக்கேலுக்கும் வாக்குவாதம்
தேமுதிக கொறடா சந்திரகுமார் படு கோபமாக காணப்பட்டார். தமிழழகனை நோக்கி முன்னேறிய அவரை மைக்கேல் ராயப்பன் தடுத்து நிறுத்தினார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது அப்படியே கைகலாப்பாக மாறியது.

அடிதடி - சட்டை கிழிப்பு
இதைத் தொடர்ந்து தேமுதிக எம்.எல்.ஏ.க்களும், அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ.க்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். சட்டையை பிடித்து இழுத்து அடித்தனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. கூச்சல், அமளியாக இருந்தது.

சபாநாயகர் பேச்சைக் கேட்கவில்லை
சபாநாயகர் தனபால் அனைவரையும் சமரசம் செய்ய முயன்றார். ஆனால் நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை. இதனால் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சட்டசபையில் இருந்து வெளியேற்ற காவலர்களுக்கு உத்தரவிட்டார். உடனே அவை காவலர்கள் ஓடி வந்து தேமுதிக. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்றினார்கள்.

'துரோகி' தமிழழகன்:
பின்னர் வெளியே வந்த சந்திரகுமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். சந்திரகுமார் கூறுகையில், தேமுதிகவுக்கு துரோகம் செய்த தமிழழகன் எம்.எல்.ஏ. அதிமுகவினர் எழுதி கொடுத்ததை வாசித்தார். துணைக் கேள்வி கேட்கும்போது, விவாதம் போல அவர் விளக்கம் அளிக்கிறார்.

சபாநாயகர் எங்களுக்கு பாதுகாப்பாக இல்லை
முதல்வரைப் புகழ்ந்து பேசி அவர் செய்த துரோகத்தை நியாயப்படுத்துகிறார். அதை தட்டிக் கேட்டால் ஆளும் கட்சியினர், துரோகிகளுக்கு ஆதரவாக எங்களைத் தாக்க வருகிறார்கள். சபாநாயகர் எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார் என்று நினைத்தால், அவர் எங்களை தாக்குபவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

காகிதங்களை வீசுகிறார்கள்
எங்கள் மீது புத்தகங்களையும், காகித கட்டுக்களையும் எடுத்து வீசுகிறார்கள். ஜன நாயகம் படுகொலை செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை அவமானப்படுத்தி விட்டதாக சட்டசபைக்கு வெளியில் வந்து கூறினார். இப்போது எங்களையே தாக்கி அவை காவலர்களை வைத்து வெளியேற்றுகிறார்கள்.

ஹைலைட்... அமைதியாக வெளியேறிய பண்ருட்டி...
தேமுதிக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் அவைக் காவலர்கள் வெளியேற்றிய நிலையில் மூத்த உறுப்பினரும், தேமுதிக துணைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் மிகுந்த அமைதியோடு, தானாக வெளியில் நடந்து சென்றார்.












Click it and Unblock the Notifications