பாலச்சந்திரனை மூன்றடி தூரத்தில் நிற்க வைத்து சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிங்கள இனவாத வெறியர் ராஜபக்சே ஒரு சர்வதேசப் போர்க்குற்றவாளி என்பதற்கு ஆதாரம் தேடி உலக நாடுகளோ, ஐ.நா. மன்றமோ வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. அதற்காக எந்த விசாரணையும் மேற்கொள்ளவும் தேவையில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் தளிரை, துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர நிகழ்ச்சியைக் காணும் போது, கொடுமை, கொடுமை, இதைவிடப்பெரிய கொடுமையை வேறெங்கும் காண முடியாது.
அந்தப் பச்சிளம் பாலகன் என்ன பாவம் செய்தான்:
உலகத்திலே உள்ள எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடூரமான கொலை செய்யப்பட்டதற்கான குறிப்பே இல்லை. மணல் சாக்குகளின் மத்தியிலே பிணைக்கைதியாக அந்தச் சிறுவனை அடைப்பதற்கே கல் நெஞ்சம் வேண்டும். அந்தப் பச்சிளம் பாலகன் என்ன பாவம் செய்தான்.
நேற்றைய தினம் வெளியிட்ட அந்தப் புகைப்படங்களைக் கண்டு கலங்கிக் கண்ணீர் விடாத கட்சித் தலைவர்களே தமிழகத்திலே இல்லை. அந்த இளைஞனை நோக்கித் துப்பாக்கியை நீட்டுவதற்கு எத்தகைய நெருப்பு நெஞ்சம் வேண்டும்! அமைதியாக ஆயுதமின்றி சமாதானம் பேசச் சென்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களையெல்லாம் ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்த இலங்கை ராணுவம், 12 வயது பையனைக்கூட மணல் மூட்டைகளுக்கு மத்தியிலே தனிமைச் சிறையிலே வைப்பதைப் போல வைத்திருக்க வேண்டுமென்றால், எத்தகைய கொடுமை அது.
சிங்கள ராணுவத்தினர் அடுக்கடுக்காகச் செய்த அட்டூழியங்களையெல்லாம் லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் மூலமாக உலகத்திற்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறது. உலக நாடுகளுக்கு மத்தியிலே உத்தமராக வேடம் தரித்த ராஜபக்சேயின் உண்மைச் சொரூபம் தோலுரிக்கப்பட்டு வருகிறது.
பாலகன் பாலச்சந்திரனின் இந்த மூன்று புகைப்படங்களையும் காணும் உலக நாடுகள் எல்லாம் சிங்கள இனவாத அரசுக்கு எதிராக இயல்பாகவே தங்கள் குரலை எழுப்பியே தீரும்.












Click it and Unblock the Notifications