சுரண்டையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த வாலிபரை தேடும் போலீசார்
நெல்லை: சுரண்டையில் அரிவாளுடன் வாலிபர் ஒருவர் கொலை வெறியுடன் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சுரண்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சுரண்டை பேருந்து நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். சட்டை அணியாமல் லுங்கியும், கருப்பு கலரில் கைப்பனியனும் அணிந்திருந்தார். அவர் கையில் நீண்ட அரிவாளை வைத்து கொண்டு சத்தமிட்டப்படி அங்கும் இங்கும் பரபரப்பாக சுற்றித் திரிந்தார். இதனால் அங்கு நின்ற பெண்கள், மாணவ, மாணவிகள் அலறி அடித்து ஓடினர். அந்த வாலிபர் பேருந்து நிலையம், மார்க்கெட், பஜார் பகுதியில் அரிவாளை வீசியபடியே வந்தார். இது குறித்து சுரண்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த வாலிபர் தலைமறைவானார்.
வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போன்ற தோற்றம் கொண்ட அந்த வாலிபரின் பனியனில் இந்தி வார்த்தை எழுதப்பட்டிருந்தது. அவர் யார், எந்த ஊர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரையாவது கொலை செய்யும் நோக்கத்தில் அவர் சுரண்டை வந்தாரா, அல்லது குடிபோதையில் அரிவாளை சுழற்றி பந்தா காட்டினாரா என தெரியவில்லை. இந்த சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.