லோக்சபா, சட்டசபை தேர்தல்கள்- வியூகம் வகுக்கக் கூடுகிறது பாஜக தேசிய செயற்குழு!
டெல்லி: லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம் வகுக்க பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.
தென்னிந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில்தான் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக தலைமையிலான கர்நாடகா அரசின் பதவிக் காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதேபோல் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் டெல்லி மாநில சட்டசபைகளின் பதவிக் காலமும் முடிவடைகிறது. இதனால் இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதேபோல் லோக்சபா தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுக்க பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தல்கள் வியூகங்களுடன் அசாம் வன்முறை, சேது சமுத்திர விவகாரம், பொருளாதார நெருக்கடி ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்திருக்கும் முதல்வர் நரேந்திர மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று கூறப்படும் நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications