தமிழகம் வழியாகத்தான் இந்தியாவுக்குள் 'நுழைய' வேண்டும் இலங்கை - இந்திய தூதர் திடீர் பேச்சு!
கொழும்பு: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாதவர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ள நிலையில், திடீரென தமிழகத்திற்கு ஆதரவாக, இலங்கைக்கு அறிவுரை கூறும் வகையில் பேசியுள்ளார் இலங்கைக்கான இந்தியத் தூதர் எஸ்.கே.காந்தா.
இதுகுறித்து இலங்கை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில்தான் தமிழகத்தை இலங்கை அரசு மதிக்க வேண்டும், தவிர்க்கக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளார் காந்தா.
தமிழகத்தின் வழியாகத்தான் இந்திய அரசை எப்போதும் இலங்கை அரசு அணுக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காந்தாவின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

கலாச்சார - மத தொடர்புகள்
கலாச்சார ரீதியாகவும், மத ரீதியாகவும் இந்தியர்களும், இலங்கையர்களும் நெருங்கிய தொடர்புடையவர்கள். ஆனால் சமீப காலத்திய சில கருத்து வேறுபாடுகள் இரு நாடுகளின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நட்புறவுக்கு களங்கமாக அமைந்து விட்டது.

தமிழகம்தான் முக்கியம்
இலங்கையைப் பொறுத்தவரை தமிழகம்தான், அதற்கு முக்கியமானதாக இருக்கும். தமிழகத்தின் வழியாகத்தான் இந்தியாவுக்குள் அது நுழைய வேண்டும்.

தமிழகத்தைத் தாண்டித்தான்
இலங்கை அரசு, இந்தியாவுடன் நேரடியாக அரசுத் தொடர்புகளை பேணுகின்றபோதும், அது தமிழகத்தைத் தாண்டித்தான் டெல்லியை அடைய வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை இலங்கை கருத்தில் கொள்வது இல்லை.

டெல்லியை விட தமிழகமே முக்கியம்
இலங்கை தனது அரசுத் தொடர்புகளை டெல்லியுடனேயே நிறுத்திக் கொள்கிறது. ஆனால், இலங்கை அரசு டெல்லியுடன் கொண்டுள்ள தொடர்பை விட தமிழகத்துடன் மேற்கொள்ள வேண்டிய அரசு ரீதியிலான உறவே மிகவும் முக்கியமானது.

பிரச்சினையிலிருந்து தப்பலாம்
இலங்கை தமிழகத்தின் வழியாக இந்திய அரசிடம் செல்வதால் மட்டுமே பல்வேறு பிரச்னைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சிங்களர்களைத் தாக்கக் கூடாது
இந்தியாவுக்கு சுற்றுலா வரும் சிங்களர்கள் மீது தாக்குதல் நடைபெறுவது துரதிர்ஷ்டவசமானதாகும். இது இலங்கையர்களின் மனதில் பயத்தை உண்டாக்க நடக்கிறது. ஆனால் அது நிறைவேறாது என்றார் காந்தா.
காந்தாவின் திடீர் தமிழக ஆதரவுப் பேச்சு பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மத்திய அரசைப் போலவே தமிழகத்தையும் கையில் போட்டுக் கொண்டால் நல்லது என்று இலங்கைக்கு அவர் மறைமுகமாக அறிவுரை கூறியுள்ளாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications