தீவிரவாத புகார்: பின்லேடன் மருமகன் துருக்கியில் கைது- அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

கெய்த் மீது தீவிரவாத புகார் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். அமெரிக்க சிறையில் அவர் அடைக்கப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
பின்லேடனின் மகள் பாத்திமாவை மணந்துள்ளார் கெய்த். இவர் மீது அமெரிக்கர்களைக் கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு துருக்கியில் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம்தான் கெய்த் கைதானார்.முன்பு இவர் அல் கொய்தாவின் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.
இருப்பினும் இவருக்கு அல் கொய்தா அமைப்பில் தீவிர செயல்பாடுகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அதேபோல 2001ல் செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல் சதித் திட்டத்திலும் இவருக்குப் பங்கில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரிய அளவிலான சதியில் இவர் ஈடுபட்டதாகவும் தெரியவில்லை. ஆனால் அமெரிக்கர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக அவர் மீது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
47 வயதாகும் கெய்த், அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த ஒரு மூத்த உறுப்பினராக கருதப்படுகிறார். மேலும் அமெரிக்க கோர்ட்டில், அல் கொய்தாவைச் சேர்ந்த ஒரு முக்கியப் புள்ளி விசாரிக்கப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கியின் அங்காரா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கடந்த மாதமே கெய்த்தை துருக்கி அதிகாரிகள் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. ஈரானிலிருந்து அவர் துருக்கிக்குள் வந்துள்ளார். ஈரானில்தான் இவர் 10 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தார்.
முன்னதாக இவரை நேரடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க துருக்கி அதிகாரிகள் விரும்பவில்லை. இதையடுத்து முதலில் அவரை குவைத்துக்கு நாடு கடத்தினர். பின்னர் அங்கிருந்து அவர் ஜோர்டான் கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து அவரை தங்களது பொறுப்பில் அமெரிக்க அதிகாரிகள் எடுத்தனர். பிறகு அவர் நியூயார்க் அழைத்துச் செல்லப்பட்டார்.
மத போதகராகவும், ஆசிரியராகவும் திகழ்ந்தவர் கெய்த். குவைத்தில் இவர் பல காலம் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவால் பிடிக்கப்பட்டு பின்னர் ஈராக் நிர்வாகத்தால் தூக்கிலிடப்பட்ட அதிபர் சதாம் உசேனுக்கு எதிராக செயல்பட்டவரும் கூட. 2000மாவது ஆண்டு இவர் ஆப்கானிஸ்தானுக்குப் போனார். அங்கு பின்லேடனை சந்தித்தார். பிறகு பின்லேனின் மகள் பாத்திமாவை மணந்து கொண்டார்.
அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் அதை நியாயப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications