சம்மதத்துடன் ‘செக்ஸ்’ உறவு: வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா: அமைச்சரவை ஒப்புதல்

புதிய சட்ட திருத்தம்:
டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர், கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, கற்பழிப்புக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கும் அவசர சட்டமொன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இது சம்பந்தமாக, மத்திய அமைச்சர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த மசோதா பற்றி பரிசீலிப்பதற்காக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த குழு கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் அனைத்தும், களையப்பட்டு ஒருமித்த கருத்து எட்டப்பட்டு, புதிய சட்ட மசோதாவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் வழங்கியது.
வயது வரம்பு குறைப்பு:
இந்த மசோதாவின் முக்கிய அம்சமான, பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் ‘செக்ஸ்' உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும் அம்சத்தில்தான், மத்திய அமைச்சர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதனால், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
ஆனால், இதன்மூலம், பொய்யான கற்பழிப்பு புகார்களை தடுக்க முடியும் என்பது, வயது வரம்பை குறைக்க வேண்டும் என்பவர்களின் வாதமாக இருந்தது. முடிவில், வயது வரம்பை 16 ஆக குறைக்கும் முடிவு, சட்ட திருத்த மசோதாவில் ஏற்கப்பட்டது.
அதேபோல் மற்றொரு சர்ச்சைக்குரிய அம்சமான ‘பாலியல் பலாத்காரம்' என்ற பொதுவான வார்த்தைக்கு பதிலாக, கற்பழிப்பு என்ற வார்த்தையை மசோதாவில் சேர்ப்பது குறித்தும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த சட்ட மசோதா, வரும் திங்கட்கிழமையன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications