கருணா முன்தான் பாலச்சந்திரனைக் கொன்றனர்.. பல தலைவர்கள் உயிருடன் உள்ளனர் - மாஜி பாதுகாவலர்
ஜெனிவா: துரோகி கருணாவின் முன்னிலையில்தான் பாலச்சந்திரனைக் கொடூரமாகக் கொன்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் பலரும் உயிருடன் உள்ளனர் என்பது எங்களுக்கே இப்போதுதான் தெரிய வந்துள்ளது. அனைவரும் முக்கியக் கட்டளைக்காக காத்திருக்கிறோம் என்று பாலச்சந்திரனின் முன்னாள் பாதுகாவலர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை அளித்துள்ளது..
பாலச்சந்திரனின் கொடூரக் கொலை குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
பாலச்சந்திரனுக்கு 5 பேரை பாதுகாவலர்களாக பிரபாகரன் நியமித்திருந்தார். முள்ளிவாய்க்காலில் இறுதி கட்ட போர் நடந்த போது அந்த 5 பாதுகாவலர்களையும் பிரபாகரன் வெளிநாட்டுக்கு தப்ப வைத்தார்.
அவர்களில் ஒரு பாதுகாவலர் கடந்த வாரம் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார். பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக சில புதிய தகவல்களை அவர் வெளியிட்டார். அவர் கூறிய தகவல்கள்:

நன்கு படிப்பான் பாலச்சந்திரன்
பாலச்சந்திரன் நன்றாக படிப்பான். புத்தகம் வாசிப்பதில்தான் அவன் அதிக நேரத்தை செலவிடுவான். அவனுக்கு பெரும்பாலும் தனிமையில் இருப்பதுதான் பிடிக்கும்.

பிரபாகரன் மகனுக்கு துப்பாக்கி பிடிக்காது
சிறு வயதில் இருந்தே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பார்த்தாலே அவனுக்கு பிடிக்காது. சார்லஸ் போன்று அவனிடம் போராட்ட குணம் இருந்தது இல்லை.

சிங்களர்களின் கையில் பிரபாகரன் குடும்பப் படம்
தலைவர் எங்களை ஈழத்தில் இருந்து வெளி நாட்டுக்கு அனுப்பிய போது சிங்கள ராணுவ வீரர்கள் ஒவ்வொருவரிடமும் தலைவர் குடும்பத்தினரின் படங்கள் இருப்பதை அறிந்தோம்.

கருணாதான் பக்கபலம்
தலைவர் குடும்பத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று அவர்கள் வெறி கொண்டு அலைந்தனர். அவர்களுக்கு கருணா பக்க பலமாக இருந்தார்.

கருணா முன்னிலையில்தான் பாலச்சந்திரன் கொலை
பாலச்சந்திரன் உயிருடன் பிடிபட்டபோது, அங்கு கருணா இருந்துள்ளார். அவர்தான் பாலச்சந்திரனை பிரபாகரன் மகன் என்று அடையாளம் காட்டியுள்ளார். அவரது முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

ஜெனிவாவில்தான் தெரிய வந்தது
முதலில் எங்களுக்கு இது தெரியவில்லை. ஜெனீவா நகரில் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினளர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிய போதுதான் கருணாவின் துரோகம் தெரிந்தது. ஒரு பிஞ்சு உயிரை அருகில் நின்று சுட்டு பறித்தவர்கள் எந்த அளவுக்கு கொடியவர்களாக இருப்பார்கள் என்று பார்த்து கொள்ளுங்கள்.

தலைவர் தீர்க்கதரிசி
எங்கள் தலைவர் தீர்க்கதரிசி. எதிர்காலத்தில் உலக மக்களின் எழுச்சி தமிழ் ஈழத்தைப் பெற துணை நிற்கும் என்றார். தற்போது அதுதான் நடக்க தொடங்கியுள்ளது.

பல தலைவர்கள் உயிருடன்
ஈழத்தில் இருந்து வெளியேறிய நாங்கள் தற்போது ஒன்று சேர தொடங்கியுள்ளோம். முக்கிய மூத்த தலைவர்கள் பலர் உயிருடன் இருப்பது எங்களுக்கே இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

கட்டளைக்காக காத்திருக்கிறோம்
நாங்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்த போது மீண்டும் தலைவரிடம் இருந்து உத்தரவு வரும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்றனர். இப்போது நாங்கள் அந்த உத்தரவை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications