ஸ்பெக்ட்ரம்- ஆ.ராசாவை ஜேபிசி விசாரணைக்கு அழைக்க வேண்டும்: யஷ்வந்த் சின்கா

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை கடைபிடித்ததால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பது மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் புகார். இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி அனைத்துக் கட்சி எம்.பிக்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய பலருக்கு, கூட்டுக்குழு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தியது. இந்த கூட்டுக் குழுவின் முன்பு நேரில் ஆஜராகி தமது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க ஆ.ராசா விரும்பினார். இதுதொடர்பாக கூட்டுக்குழுவின் தலைவர் பி.சி.சாக்கோவுக்கு அவர் கடிதங்கள் எழுதினார். ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்ட பி.சி.சாக்கோ, சில கேள்விகளை மட்டும் ஆ.ராசாவுக்கு அனுப்பி வைத்தார். அவற்றுக்கு ஆ.ராசா எழுத்து மூலமாக பதில் அனுப்பினார். அவரது பதில் சமீபத்தில் கூட்டுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.ஆனால் விசாரணைக்கு ஆ.ராசாவை கூட்டுக்குழு நேரில் அழைக்காததற்கு அந்த குழுவில் உள்ள பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந் நிலையில் கூட்டுக்குழுவின் உறுப்பினரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்கா நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பார்லிமென்ட் கூட்டுக் குழு ஆ.ராசாவை நேரில் அழைக்காதது கூட்டுக்குழு விசாரணையில் உள்ள மிகப்பெரிய குறைபாடு ஆகும். தமது கருத்துக்களை கூட்டுக்குழுவிடம் நேரில் தெரிவிக்கும் உரிமை ஆ.ராசாவுக்கு உள்ளது. ஆனால் ஆ.ராசாவை விசாரணைக்கு அழைக்காததை வைத்து பார்க்கும்போது, மத்திய அரசு உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக கூட்டுக்குழுவை அமைத்ததா? அல்லது உண்மையை மூடி மறைப்பதற்காக அமைத்ததா? என்ற சந்தேகம் எனக்கும் குழுவில் உள்ள சில உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், சபாநாயகர் மீராகுமாருக்கும் நான் கடிதம் எழுத இருக்கிறேன். கூட்டுக்குழுவின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க விரும்ப தயாராக இருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
காங்கிரஸ் நிராகரிப்பு
இதனிடையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் ஆஜராக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு யஷ்வந்த் சின்கா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தை காங்கிரஸ் கட்சி நிராகரித்திருக்கிறது. பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் பிரதமர் ஆஜராகவோ அல்லது தன்னிலை விளக்கம் அளிக்கவோ தேவையில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.












Click it and Unblock the Notifications