தேனி அருகே குடிபோதையில் தாயை கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த மகன்
தேனி: தேனி அருகே குடிபோதையில் தாயைக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக-கேரள எல்லைப்பகுதியான தொடுபுழா அருகில் உள்ள உடும்பனூர் ஊராட்சி உப்புகுன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவல்லி (58). அவரது கணவர் பாஸ்கரன் இறந்து 8 ஆண்டுகள் ஆகிறது. அவர்களின் 2 மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஆனந்தவல்லி திருமணமாகாத மகன் சுதனுடன் வசித்து வந்தார்.
குடிப்பழக்கம் உள்ள சுதன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தாயுடன் தகராறு செய்யும் வழக்கம் உள்ளவர். இதனாலேயே அவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக ஆனந்தவல்லியைக் காணவில்லை. உடனே அக்கம்பக்கத்தினர் இது குறித்து ஆனந்தவல்லியின் மகள் ஷீலாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் ஊருக்கு கிளம்பி வந்து சகோதரனிடம் தாய் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு சுதன் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதுடன் ஷீலாவை வீட்டுக்குள் விட மறுத்துள்ளார்.
இதனால் ஷீலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு வீட்டின் பின்புறம் சென்றபோது அங்கு ஒரு குழி தோண்டி மண்ணால் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதைப் பார்த்து சந்தேகித்த அவர் இது குறித்து கரிமண்ணூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த குழியைத் தோண்டி பார்த்தபோது அதில் ஆனந்தவல்லியின் அழுகிய உடல் இருந்தது. உடலில் பல இடங்களில் காயம் இருந்தது.
போலீஸ் விசாரணையில் சுதன் குடிபோதையில் தாயுடன் தகராறு செய்து அவரைக் கொன்று புதைத்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சுதனை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications