சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுக்கு கண்டனம்! 16-ந் தேதி திமுக போராட்டம்!!
சென்னை: சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து வரும் 16-ந் தேதி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், மாவட்ட , பகுதி அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் , சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து வரும் 16-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கொசு ஒழிப்பு, டெங்கு, மலேரியா காய்ச்சலை தடுக்கக்கூட நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. இதைக் கண்டித்தே இந்த அறப் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.