மதுரை: ஸ்டாலின் ஆதரவாளர்கள் 6 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்த திமுக
சென்னை: மதுரை மாவட்ட மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் 6 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திமுக மேலிடம் ரத்து செய்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் 15 பேருக்கு திமுக மேலிடம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் மு.க. அழகிரியின் பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.. அவர்களுக்கெல்லாம் ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று அழகிரி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் திடீரென மதுரை மாவட்ட தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கோ.சந்திர சேகரன், பொதுக்குழு உறுப்பினர் எம்.ஏ.பழனிச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த எஸ்.சந்தானம், ஆடுதுரை, எஸ்.சுரேந்தர் மற்றும் மதுரை கிழக்கு ஒன்றிய வரிச்சியூரை சேர்ந்த எஸ்.முருகன் ஆகிய ஸ்டாலின் ஆதரவாளர்கள் அண்மையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தி.மு.க.வுக்கு எதிராகவும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்ததாக கூறி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் 6 பேரையும் நீக்கினார். நீக்கப்பட்ட அனைவரும் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள். ஸ்டாலின் ஆதரவு தி.மு.கவினர் நீக்கப்பட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நீக்கப்பட்ட 6 பேரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட அனுமதிக்குமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மனு அனுப்பினர். அவர்களது கோரிக்கையினை ஏற்று அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இன்று முதல் தொடர்ந்து கழக பணியாற்றிட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
முரண்டுபிடித்து வரும் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களை ஒருவழிக்குக் கொண்டுவரவே ஸ்டாலின் ஆதரவாளர்கள் நீக்கம் அறிவிப்பும் தற்போது ஒழுங்கு நடவடிக்கை ரத்து அறிவிப்பும் வெளியிடப்பட்டதாக தெரிகிறது.