தமிழ் நடிகர்களுக்கு எதிராக தர்ணா- சிவாஜிக்கு ஜோடியாக நடித்த சிங்கள நடிகை அறிவிப்பு
கொழும்பு: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் சிங்களத் திரையுலகினர்.
தமிழ் நடிகர் நடிகையருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மாலை கொழும்பு சுதந்திரா மைதானத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பிரபல சிங்கள நடிகையும், பைலட்பிரேம்நாத் படத்தில் சிவாஜிகணேசனுடன் இணைந்து நடித்தவருமான மாலினி பொன்சேகா கூறியுள்ளார்.

இன்று மாலை தர்ணா போராட்டம் நடத்திய பிறகு இந்தியத் தூதரகம் சென்று எங்களின் செய்தியை அளிப்போம். பின்னர் அந்த செய்தியை, இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் விளம்பரமாக வெளியிடவுள்ளோம் என்றார்.
இன்றைய போராட்டத்தில் விளையாட்டு வீரர்கள், மகளிர் அமைப்புகள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கநல்து கொள்ளவுள்ளனராம்.
மாலினி பொன்சேகா யார்?
1978ம் ஆண்டு வெளியான படம் பைலட் பிரேம்நாத். இதில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் இணைந்து நடித்தவர் தான் மாலினி பொன்சேகா. இவர் இலங்கையைச் சேர்ந்த பிரபல நடிகையாவார்.தற்போது இவர் எம்.பியாக இருக்கிறார்.
மாலினி செய்தியாளர்களிடம் மேலும் பேசுகையில், தமிழ்த் திரையுலகிடமிருந்துதான் நாங்கள் நிறையப் பெற்றுள்ளோம், கற்றுள்ளோம்.இரு திரையுலகினரும் நல்ல நட்புடன் இருந்து வருபவர்கள். அது தொடர வேண்டும் என விரும்புகிறோம்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் இணைந்துநடித்த நாட்களை இன்னும் நான் நினைவில் வைத்துள்ளோம். அப்படத்தில் ஸ்ரீதேவி எனது மகளாக நடித்திருந்தார். சிவாஜி கணேசன் எனது கணவராக நடித்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு மதித்தோம்.
ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இங்கு அனைவருக்கும் பிடித்த பெயர்கள். இப்போதும் கூட திரைப்படம் தொடர்பான எதுவாக இருந்தாலும் நாங்கள் தமிழகத்தைத்தான் பார்க்கிறோம். இப்படி இருக்கையில் எங்களது நண்பர்களாகிய தமிழ்த் திரையுலகினர் இலங்கைக்கு எதிராக போராடுவது வருத்தம் தருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications