ரயிலின் பெட்டி மீது ஏறிய வாலிபர் மின்கம்பி உரசியதால் எரிந்து பலி
சென்னை: சென்னையில் இருந்து சென்ற ரயிலின் பெட்டி மீது ஏறிய வாலிபர் மீது மின்கம்பி உரசியதால் தூக்கி வீசப்பட்டு பலியானார்.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு நேற்று மதியம் மின்சார ரெயில் சென்றது. எண்ணூர் நிலையத்தில் நின்றபோது கூட்ட நெரிசலுக்குள் வாலிபர் ஒருவர் வேகமாக புகுந்தார். திடீரென அவர் ரெயில் சென்று கொண்டிருந்தபோதே சரசரசவென ரெயில் பெட்டியின் மேல் பகுதிக்கு ஏறினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் அவரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அவர் பெட்டி மீது நின்று கூச்சலிட்டார். அத்திப்பட்டு புதுநகர் நிலையத்தில் ரெயில் வந்தபோது பெட்டி மீது நின்ற வாலிபரின் கை தவறுதலாக மின்சார வயர் மீது உரசியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் எரிந்த நிலையில் உயிருக்கு போராடினார்.
உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொருக்குப் பேட்டை ரெயில்வே போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பலியான வாலிபர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரூனாசர்பாஜ் (35) என்பதும் எண்ணூரில் தங்கி வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது.