ஆப்கான்: மாணவிகள் பள்ளி செல்வதை தடுக்க தீவிரவாதிகள் விஷவாயு தாக்குதல்- 74 பேர் மயக்கம்
தலூகான்: ஆப்கானிஸ்தானில் விஷ வாயு தாக்கி 74 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவிகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க தீவிரவாதிகள் சதியாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீஸ் ஆராய்ந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தக்ஹார் மாகாணத்தின் தலைநகர் தலூகானில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் திடீரென்று விஷவாயு பரவியது. இதில் 74 மாணவிகள் மயக்கம் போட்டு விழுந்தனர். உடனடியாக இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு பலர் வீடு திரும்பினர்.
மேலும் சிலர் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். காரணம் என்ன? என்பது குறித்து கண்டறிய மாணவிகளின் ரத்தம் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு மற்றொரு பள்ளியிலும் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்தனர் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இதுபோன்று 3 சம்பவங்கள் நடைபெற்றன.
அப்போது நடத்திய சோதனையில் பள்ளிக்கூட வளாகத்தில் மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அனைத்து சம்பவங்களும் மகளிர் பள்ளிகளிலேயே நடக்கிறது. எனவே பள்ளிக்கூடம் சென்று மாணவிகள் படிப்பதை தடுக்க தீவிரவாத அமைப்பு சதி செய்கிறதா? என்ற சந்தேகம் வலுக்கிறது.
இந்த சம்பவங்கள் அரங்கேறும் தலூகான் நகரானது, காபூலில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆனால் இதுவரையில் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்காமல் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications