திருப்பூர்: டிவி சேனல் மாற்றுவதில் தம்பியுடன் தகராறு: 13 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை!!
திருப்பூர்: திருப்பூரில் டிவி பார்ப்பதில் தம்பியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த 13 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
டிவி என்பது இன்று அனைவரது வாழ்விலும் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. உலகின் ஏதோஒரு மூலையில் நடப்பதை உடனுக்குடன் நம் கண்களுக்கு விருந்தாக்கியதால், அனைவராலும் கொண்டாடப்பட்டது, ஆனால், அதன் மூலம் மக்கள் பல தீய விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மை. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வாழ்வு ப சமயங்களில் மிகவும் மோசம் என்பதற்கு பின்வரும் சம்பவமும் ஓர் உதாரணமே...
திருப்பூர் மங்கலம்ரோடு ஈஸ்வரமூர்த்தி லே&அவுட் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். பனியன் தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி. மகள் திவ்யதர்ஷனி (13), மகன் சூர்யபிரகாஷ் (12). கருவம்பாளையம் அரசு பள்ளியில் திவ்யதர்ஷினி படித்து வந்தார்.
பள்ளி விடுமுறை என்பதால் அக்கா, தம்பி இருவரும் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தனர். சேனல் மாற்றுவதில் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. தந்தை ஆதிமூலம் கேபிள் ஒயரை பிடுங்கிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் திவ்யதர்ஷினியின் அம்மாவும், தம்பியும் வீட்டுக்கு வெளியில் இருந்தனர். அப்போது, திவ்யதர்ஷனி வீட்டின் கதவை தாழிட்டு கெரசின் ஊற்றி தீக்குளித்தார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். திருப்பூர் சென்ட்ரல் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications