கோவை வணிகவளாக தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ஜெ. உத்தரவு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவை-அவினாசி சாலை, லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், ராஜகோபால் என்பவரின் மகள் கீர்த்தனா, செல்வராஜ் என்பவரின் மனைவி விஜயலட்சுமி, ஜான் என்பவரின் மனைவி மார்கரெட் மேரி மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகிய நால்வரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்தத் தீ விபத்தில் அகால மரணமடைந்த கீர்த்தனா, விஜயலட்சுமி, மார்கரெட் மேரி மற்றும் ஸ்ரீலெட்சுமி ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தீ விபத்தில், அப்போது கட்டடத்திலிருந்த ஐந்து நபர்களும், கோயம்புத்தூர் (கணபதி) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தின் நிலைய அலுவலர் எம்.ராமு, முன்னணித் தீயணைப்போர் எம்.ரகுநாதன், தீயணைப்போர் முருகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், கோயம்புத்தூர் மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த கீர்த்தனா, விஜயலட்சுமி, மார்கரெட் மேரி மற்றும் ஸ்ரீலெட்சுமி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications