திமுகவில் நடிகர்கள்…. எம்.ஜி.ஆர் தொடங்கி குஷ்பு வரை ரவுண்ட் அப்
அரசியலில் நடிகர்கள் இணைவது ஒன்றும் புதிய விசயமில்லை. நடிகர்களை வைத்து அவர்களின் ரசிகர்களை ஈர்க்கும் அரசியல் கட்சியினர், நடிகர்களுக்கு ஓரளவிற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கூட்டம் சேர்க்கத் தேவை என்பதால் கட்சியில் ஓர் ஓரத்தில் நடிகர்களை வைத்து அழகு பார்க்கும் அரசியல் தலைவர்கள், கட்சியை வைத்து நடிகர்கள் வளர்கிறார்கள் என்று தெரிந்தாலே ஓரங்கட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
சைலண்டாக நடக்கும் இந்த உள்குத்து நடவடிக்கைகள் எல்லா கட்சியிலும்தான் இருக்கும் என்றாலும் திமுகவில் இது கொஞ்சம் அதிகமாகவே நடக்கும். நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய குஷ்பு வரை யாரும் இதற்கு விதி விலக்கல்ல. திமுகவில் நடிகர்களுக்கு ஏற்பட்ட மனச்சங்கடங்களைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட விலகல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

எம்.ஜி.ராமச்சந்திரன்
எம்.ஜி.ஆர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் கருணாநிதியை முதல்வராக்க முன் நின்றார். பொதுக்குழுவில் கணக்கு கேட்டார் என்பதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அ.இ.அ.தி.மு.க உதயமானது. தொடர்ந்து 3முறை முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்தார்.

நடிகர் எஸ்.எஸ்.ஆர்
லட்சிய நடிகர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், இந்தியாவிலேயே அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ ஆன முதல் நடிகர் என்ற பெருமையோடு இருந்தவர். பொதுக்குழுவில் கருணாநிதிக்கு எதிராக கருத்து கூறியதாக அவரை அடித்து துவைக்க பாய்ந்தனர் தொண்டர்கள். இந்த கசப்பினால் கட்சியில் இருந்து விலகினார் எஸ்.எஸ்.ஆர்.

சிவாஜி கணேசன்
பக்தியோடு கோவிலுக்குப் போய் சாமி கும்பிடும் சிவாஜி திமுகவில் சிவாஜி இணைந்த பின்னர் சாமி கும்பிடுவதை தவிர்த்தார். ஆனால் பந்துலு அழைப்பின் பேரில் திருப்பதிக்கு போனதுதான் அவருக்கு வினையாகிப் போனது. சென்னை திரும்பும் முன்னதாகவே திருப்பதி கணேசா கோவிந்தா என்று சுவர்களில் எழுதி அவமானப்படுத்தினார். அதுவே அவர் திமுகவை விட்டு விலக காரணமானது.

டி.ராஜேந்தர்
சினிமாவில் டி.ராஜேந்தருக்கு என்று தனி ரசிகர் வட்டம் ஒரு காலத்தில் இருந்தது. அதனாலேயே திமுகவில் இணைந்தார். ஒருமுறை எம்.எல்.ஏ கூட ஆனார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது எல்லோரும் அடக்கி வாசிக்கையில் அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர் டி.ராஜேந்தர். இலங்கைப் பிரச்சினைக்காக கட்சியில் இருந்து விலகினார்.

ராதாரவி
எம்.ஆர்.ராதா காலத்தில் இருந்தே அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் திமுகவில்தான் இணைந்தனர். ராதிகா, ராதாரவி ஆகியோரும் திமுகவிற்காக பிரச்சாரம் செய்தனர். அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்பதால் விலகிவிட்டனர்.

எஸ்.எஸ்.சந்திரன்
கட்சியின் நீண்ட நாளைய பிரச்சார பீரங்கி. நீண்ட நாட்களாக தம்பியாகவே வைத்திருந்தார் கருணாநிதி. திமுகவை உதறிவிட்டு அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற எம்.பியாக உயர்ந்து டெல்லிக்குப் போனார்.

நடிகர் சரத்குமார்
திமுகவில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லிக்குப் போனார். கட்சியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து விலகினார்.

நடிகர் தியாகு
ஆரம்ப காலம் தொட்டே திமுக உறுப்பினராக இருந்தவர். கட்சியில் சிலர் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று திமுகவிற்கு முழுக்குப் போட்டுவிட்டு அதிமுகவில் இணைந்தார்.

இயக்குநர் கே. பாக்கியராஜ்
எம்.ஜி.ஆர் இருந்தபோது அவரின் வாரிசு என்று அறிமுகம் செய்யப்பட்டவர். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் இணைந்தார். கடந்த 2011 தேர்தல் வரை கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். உரிய முக்கியத்துவம் இல்லை என்று அவரும் புலம்புகிறார்.

நடிகை குஷ்பு
காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக பேச்சு அடிப்பட்டது. ஆனால் திடீரென்று திமுகவில் ஐக்கியமானார். கட்சித் தலைவர் பற்றி பேட்டி புயலைக் கிளப்பியது. இதனால் அதிருப்தி நிலையில் இருக்கும் குஷ்பு திமுகவில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications