கும்பகோணம் அருகே அம்மன் சிலை மீது கல்வீச்சு- பக்தர்கள் சாலை மறியல்!
கும்பகோணம்: கும்பகோணம் அருகே வீதியுலா வந்த அம்மன் சிலை மீது கல் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மூப்பகோவில் கிராமம் உள்ளது. இங்கு மூப்பாயி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது, சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதியுலா நடைபெற்றது. மாட்டு வண்டியில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை வைத்து வீதி வீதியாக வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடந்தினர்.
இந்த நிலையில், ஜாமியா நகர் 3வது தெருவுக்கு நள்ளிரவில் சுவாமி வந்த போது அந்த தெருவில் உள்ள சிலர் அம்மன் ஊர்வலத்தை தெருவில் அனுமதிக்க மாட்டோம் என்றனர். இதனால் வீதியுலா ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் தடுத்தவர்களுக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது.
இந்த நிலையில் அம்மன் மீது சிலர் கற்களை வீசினர். அம்மன் சிலை மீது கல் வீசியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நள்ளிரவு நேரத்தில் கும்பகோணம்- திருவையாறு சாலையில் பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பாபநாசம் டிஎஸ்பி சீனிவாசன் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார். இதனால் மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.