கருணாநிதி பேரன் அறிவுநிதி மீது தாயார் புகார்… தந்தை மு.க.முத்து மறுப்பு
சென்னை: எனது மகன் மு.க.அறிவுநிதி, எங்களை கவனிப்பதில்லை என்றும் வீட்டு வாடகைக் கூட கொடுக்காமல் தவிக்க விடுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மனைவி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மு.க.முத்து தனது மனைவி எம்.சிவகாமசுந்தரியுடன் தற்போது சென்னையை அடுத்த கானாத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களின் மகன் மு.க.அறிவுநிதி சினிமாவில் பின்னணி பாடியுள்ளார்.
இந்த நிலையில் சிவகாமசுந்தரி தனது மகன் அறிவுநிதி மீது சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார் அம்மனுவில், கூறியுள்ளதாவது:
‘'என்னுடைய தந்தை பிரபல பின்னணிப்பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். எனது கணவர் மு.க.முத்து. எனக்கு 65 வயது ஆகிறது. எனக்கு இரண்டு முறை தலையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மேலும் தற்சமயம் நான் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு முடியாத நிலையில் உள்ளேன்.
இந்நிலையில் எனது மகன் மு.க.அறிவுநிதி, அவர் மனைவி பூங்கொடி, அவரது மாமியார் யோகமங்களம் ஆகியோர் என்னிடம் உள்ள பணம் மற்றும் சொத்திற்காக தினமும் மிகுந்த தொல்லை கொடுக்கின்றனர்.
எங்களை ஆள்வைத்து அடித்து எல்லாவற்றையும் அபகரித்து விடுவேன் என்றும் மிரட்டி பயமுறுத்துகிறார்கள். தகாத வார்த்தைகளால் பேசிவருகின்றனர். எங்களுக்கு சென்னை கோபாலபுரத்தில் சொந்த வீடு உள்ளது. சில வருடங்களுக்கு முன் எங்களிடம் தந்திரமாக பேசி அந்த வீட்டை விட்டு என்னையும், என் கணவரையும் துரத்திவிட்டு, அறிவுநிதி அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அனுபவிக்கிறார்.
தற்சமயம் நாங்கள் வீடில்லாமல் கானாத்தூரில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இப்படி எங்களுக்கு துரோகம் செய்தது இல்லாமல் தொடர்ந்து மிரட்டி வருவதால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் எங்களது மனமும், உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது.
வயதான காலத்தில் எங்களால் இந்த கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது மிரட்டலால் எங்களுக்கு உயிர் பாதுகாப்பும் இல்லை. தாங்கள் எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோருகிறேன்.
ஆகவே, எனது மகன் மு.க.அறிவுநிதி, அவர் மனைவி பூங்கொடி, அவரது மாமியார் யோகமங்களம் ஆகி யோரை விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புகார் மனுவை எனது கணவர் மு.க.முத்து சம்மதத்துடன் அளிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மனைவிக்கு மறதி நோய்: மு.க. முத்து
மு.க.முத்து இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தற்போது, 65 வயதாகும் என் மனைவி, கடந்த சில மாதங்களாக, நோய்வாய்ப்பட்டு, பல நேரங்களில், மறதி ஏற்பட்டு, தான் என்ன செய்கிறோம் என, தெரியாத நிலையில் இருக்கிறார்.
ஒரு முறை இவ்வாறு நினைவு தவறி, கீழே விழுந்த காரணத்தால், தலையில் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. அதை தொடர்ந்து நானும், என் மகனும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம்.
சமீபத்தில் கூட, தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். எங்கள் குடும்பத்தில், குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன், அவரை, யாரோ தூண்டிவிட்டு, புகார் கொடுக்க சொன்னதாக தெரிய வருகிறது.
எங்களுக்குள், எவ்விதமான மனத் தாங்கலோ, கருத்து வேற்றுமையோ கிடையாது. எங்களுடைய குடும்ப பிரச்னை தொடர்பாக, நானும், என் மனைவியும், மகனும் அமர்ந்து பேசி, தீர்வு காண்போம். வெளியாட்கள் யாரும், தலையிட்டு, குழப்பத்தை ஏற்படுத்த தேவை இல்லை''என்று தெரிவித்துள்ளார்.