கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 30 பயணிகள் உயிர் தப்பினர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்து மீது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் பேருந்தில் இருந்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒன்று நேற்று இரவு பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தர்மபுரி நோக்கி சென்றது. பேருந்தை வேலுமணி என்பவர் ஓட்டினார். சுப்பிரமணி என்பவர் கண்டக்ரடாக இருந்தார்.
இரவு 11 மணி அளவில் பேருந்து கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தை தாண்டி மொட்டூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது வேகத்தடை ஒன்று இருந்ததால் டிரைவர் பேருந்தை மெதுவாக ஓட்டினார். அப்போது சாலையோரத்தில் இருட்டில் நின்று கொண்டிருந்த 20 பேர் கொண்ட கும்பல் பேருந்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது பேருந்தில் இருந்த 30 பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
குண்டு வீசப்பட்டதும் டிரைவர் பேருந்தை நிறுத்தினார். உடனே அந்த கும்பல் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உருக்கட்டையால் அடித்து சேதப்படுத்தியது. மேலும் பேருந்தின் உள் பேனட் மீதும் ஒரு பெட்ரோல் குண்டை வீசியது. இதையடுத்து பேனட் சிதறி தீப்பிடித்தது. அதற்குள் விழித்துக் கொண்ட பயணிகள், டிரைவர் மற்றும் கண்டக்டருடன் சேர்ந்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து டிரைவர் பேருந்தை கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு பயணிகளை இறக்கிவிட்டார். பின்னர் பேருந்தை டிப்போவுக்கு ஓட்டிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனாலும் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார் அங்கு விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications