19ம் தேதி பாலசந்திரன் நினைவு தினம்: மெரீனா கண்ணகி சிலை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மரணத்தை நினைவு கூறும் வகையில் வரும் 19ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இது குறித்து மே 17 இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இலங்கை, இந்தியா, சர்வதேசம் இணைந்து ஒன்றரை லட்சம் தமிழரை கொன்று குவித்து, இனப்படுகொலையை நடத்தி முடித்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது. நீதி கேட்டு தமிழ்ச் சமூகத்தின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இனப்படுகொலையை மூடி மறைக்கவும், இலங்கை அரசை காப்பாற்றவும் ஐ.நா அதிகாரிகள் முதல் அமெரிக்கா, இந்தியா என 20க்கும் மேற்பட்ட வல்லாதிக்க நாடுகள் கை கோர்த்து, போர்குற்றம், மனித உரிமை மீறல் எனும் பசப்பல் வார்த்தைகளை நம் மீது திணித்தனர். நமது கோரிக்கையை மறந்து விட்டு, எதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு, நாம் என்ன கோரிக்கை வைக்க வேண்டுமென சர்வதேச வியாபாரிகள் முடிவு செய்து கொண்டிருந்தனர். இலங்கை அரசை காப்பாற்ற இலங்கைக்கு ஆதரவான ஐ.நா தீர்மானம், எல்எல்ஆர்சி என்பவையெல்லாம் நம்முடைய அனுமதியின்றி நம் மீது திணிக்கப்பட்டன. இனியும் சர்வதேச வியாபாரிகளின், வல்லரசுகளின் அசைப்புகளுக்கேற்ப நமது கோரிக்கைகளை நாம் மாற்றிக் கொண்டிருக்க முடியாது.
நமக்கான நீதி என்பது நமது கோரிக்கையே. 60 ஆண்டுகளாக தமிழீழ மக்கள் பாதுகாத்து வந்த விடுதலை கோரிக்கையை பாதுகாத்து, அதை நோக்கி பயணிப்பது நமது கடமை. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையை நாம் மறந்து கடந்து சென்று விட முடியாது, தமிழர் கடலின் மறுபக்கத்தில் கூப்பிடும் தூரத்திலிருந்து நமது உறவுகள் கொன்று வீழ்த்தப்பட்டார்கள். எந்த கோரிக்கைக்காக ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களோ, லட்சம் தமிழராய் திரண்டு உயர்த்திப் பிடிக்க வேண்டும் அதே கோரிக்கையை.
90 ஆண்டுகளை கடந்தும் ஆர்மீனியர்கள் தங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்காக இன்றும் கூடுகிறார்கள். யூதர்கள் 60 ஆண்டுகள் கழித்து இன்றும் தங்கள் வேலைகளை நிறுத்தி யூத இனப்படுகொலைக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள். சர்வதேசமும், இந்தியாவும் செய்த துரோகத்தினை மறக்க மாட்டோம். இலங்கையின் இனவெறியை நினைவுபடுத்துவோம். உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது ஞாயிறன்று தமிழர் கடலின்(மெரீனா) ஓரத்தில் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழப் போராளி மக்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, தமிழீழத்தை மீட்க உறுதியேற்போம்.நம் சந்ததிகள் இனப்படுகொலையை மறந்து விடாமலிருக்க வருடம்தோறும் கூடுவோம்.
இந்த ஆண்டு பாலச்சந்திரன் கொல்லப்பட்ட அதே நாளான மே 19 இல், தமிழீழப் போராளி மக்களுக்காக மெரீனா கடற்கரை கண்ணகி சிலை அருகில் மெழுகுவர்த்தி ஏந்துவோம். குழந்தைகளுடன், குடும்பங்களுடன் கூடுவோம். ஏந்திப்பிடிப்பது மெழுகுவர்த்தி மட்டுமல்ல, சுதந்திர தமிழீழ கோரிக்கையும் தான் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications