பாக் தேர்தலில் நவாஸ் கட்சி வெற்றி: மீண்டும் பிரதமராகிறார்- இம்ரான் கான் கட்சிக்கு 2வது இடம்

தனது கட்சி பெரும் வெற்றி பெற்றிருப்பதாக கட்சி ஆதரவாளர்களிடையே கூறினார் ஷெரீப். ஷெரீப் 3வது முறையாக பிரதமராகப் போகிறார்.
முன்னதாக நேற்று பாகிஸ்தான் வன்முறைக்கு மத்தியில் தேர்தல் நடந்தது. வன்முறைக்கு மொத்தம் 17 பேர் பலியாயினர்.இருந்தும் மக்கள் பயப்படாமல் வாக்களிக்க குவி்ந்தனர். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதுவரை வந்த முடிவுகளின்படி ஷெரீப் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து ஷெரீப் கூறுகையில், முடிவுகள் வந்து கொண்டுள்ளன. நமது கட்சி இதுவரை தனிப் பெரும் கட்சியாக வென்றுள்ளது. மேலும் பல முடிவுகள் வர வேண்டியுள்ளது. நமக்குக் கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவைப்படாத அளவுக்கு பலம் கிடைக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்றார் ஷெரீப்.
மொத்தம் உள்ள 272 எம்.பி. சீட்களில் ஷெரீப்கட்சி 119 இடங்களில் முன்னணியில் உள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு முஷாரப்பால் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டு பிரதமர் பதவியிலிருந்து துரத்தப்பட்டார் ஷெரீப் என்பது நினைவிருக்கலாம். அதன் பிறகு பாகிஸ்தான் பல அசம்பாவிதங்களைச் சந்தித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரதமர் பதவிக்கு ஷெரீப் வரவுள்ளார்.
2வது இடத்தில் இம்ரான் கான்
இதற்கிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 2வது இடத்தைப் பெறுகிறது. நகர்ப்புற இளைஞர்கள் அக்கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
இம்ரான் கான் தேர்தலில் வெல்லாவிட்டாலும் கூட புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை பாகிஸ்தானைப் பொறுத்தவைர முஸ்லீம்லீக் அல்லது பாகிஸ்தான் மக்கள் கட்சிதான் ஆட்சியில் இருந்து வரும், இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால் அதை முதல் முறையாக உடைத்து உள்ளே புகுந்துள்ளார் இம்ரான் கான்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தற்போது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications