பாக்.பிரதமர் பதவியேற்பு விழா: நவாஸ் ஷெரீப் அழைப்பு… மன்மோகன்சிங் நிராகரிப்பு

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவேன் என்ற உங்களது கருத்துக்கு, இந்திய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்களுடனும், உங்களது அரசுடனும் இணைந்து பணியாற்ற தாம் ஆர்வமாக உள்ளதாக கூறியிருந்தார். மேலும் நவாஸ்ஷெரீப் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்,
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியா வர பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளது குறித்து பா.ஜ.க, கேள்வி எழுப்பி உள்ளது. பாகிஸ்தான் பிரதமரை இந்தியாவிற்கு அழைக்க மன்மோகன் சிங் மிகவும் அவசரப்படுவதாகவும், ஆனால் பாகிஸ்தானின் இந்தியா மீதான நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும், நற்பலன்கள் ஏற்படுமானால் அவரை அழைக்கலாம் எனவும் பா.ஜ., துணைத் தலைவர் பல்பீர் புன்ஞ் தெரிவித்துள்ளார்.
மேலும் நவாஸ் இன்னும் பதவியேற்பதற்கு முன் அவருக்கு இந்தியா வர அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டதன் காரணம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
நவாஷ் ஷெரீப் அழைப்பு
இதனிடையே தனது பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கார்கில், மும்பை தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படும். பிரதமர் மன்மோகன் சிங், என்னுடைய பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என கூறினார்.
மன்மோகன் நிராகரிப்பு
ஆனால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பை நிராகரித்தார் மன்மோகன் சிங். முக்கிய விவகாரம் குறித்து ஆலோசிக்க இருப்பதால் மன்மோகன் சிங் பாகிஸ்தான் செல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications