சாய்பாபா பெயரைச் சொல்லி ரூ.4 கோடி மோசடி: ஏமாந்த திரை சினிமா பிரபலங்கள் புகார்
சென்னை: சாய்பாபா பெயரைச் சொல்லி 4 கோடி ரூபாய் வரை பணத்தை மோசடி செய்து விட்டதாக உச்சநீதிமன்ற வக்கீல் மீது, திரை உலக பிரபலங்கள் சிலர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் சினிமா விநியோகஸ்தராக உள்ளார். கட்டிட உள்கட்டமைப்பு அலங்கார நிபுணராகவும் தொழில் செய்கிறார்.
இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அவருடன் சினிமா தயாரிப்பாளர் தட்சிணாமூர்த்தி, காண்டிராக்டர் மோகன் மற்றும் சத்யா என்ற டெய்லரிங் தொழில் செய்யும் பெண் உள்பட 7 பேர் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஸ்வரி கூறியதாவது:
நான் சத்திய சாய்பாபாவின் தீவிர பக்தை. கடந்த 2011-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் உச்சநீதிமன்ற வக்கீல் ஒருவரை சந்தித்தேன். அவர் தன்னை சாய்பாபாவின் பக்தர் என்று சொல்லிக்கொண்டார். அவர் பெரிய அளவில் ஒரு தொழில் செய்வதாகவும் சுங்க இலாகாவினர் ஏலத்தில் விடும் பொருட்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து அதிக விலைக்கு விற்று சம்பாதிப்பதாக சொன்னார். மேலும் வராத கடனுக்கு வங்கிகள் ஏலம்விடும் சொத்துக்களையும் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தும், பல கோடி ரூபாய் சம்பாதிப்பதாக தெரிவித்தார்.
தனது இந்த தொழிலில் பார்ட்னராக சேர்ந்தால் மாதந்தோறும் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் அவர் ஆசை காட்டினார். பிரபல நடிகர் ஒருவரது மனைவியும் இந்த தொழிலில் பார்ட்னராக இருப்பதாக கூறினார்.
அந்த நடிகரும் அதை உண்மை என்று சொன்னார். இதனால் நானும் ரூ.20 லட்சம் கொடுத்து பார்ட்னராகிவிட்டேன். ஆனால் நான் கொடுத்த பணத்தை ஏமாற்றிவிட்டனர். என்னைப்போல இப்போது புகார் கொடுத்துள்ள 7 பேரிடமும் மொத்தம் ரூ.4 கோடி சுருட்டப்பட்டுள்ளது.
எங்களை ஏமாற்றிய நபரை எற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அந்த நபர் சாய்பாபாவின் பக்தர் என்றும், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் என்றும் சொல்லி இந்தியா முழுவதும் ஏராளமான பேரிடம் ரூ.75 கோடிவரை ஏமாற்றி இருப்பதாக அறிகிறேன். அந்த நபர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு புவனேஸ்வரி தெரிவித்தார்.
அவருடன் வந்திருந்த டெய்லர் சத்யா, தான் 20 பேரிடம் ரூ.2.40 கோடி வசூலித்து கொடுத்து பார்ட்னரானேன். என்னை மோசம் செய்துவிட்டார் என்று கதறி அழுதபடியே கூறினார். புகார் கூறப்பட்டுள்ள மோசடி நபரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications