வீரத்தாய் குயிலி, ஹைதர் அலி, திப்புசுல்தானுக்கு மணிமண்டபம்: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு வாசித்த அறிக்கையில், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்தும் அரும்பணியை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம், தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், மனுநீதிச் சோழன் ஆகியோருக்கு மணிமண்டபங்களை அமைக்கவும், தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கவும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்பவும் ஆணையிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
வீரத்தாய் குயிலி...
நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் முனைவர் செ.கு. தமிழரசன் வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத் தளபதியாய் விளங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்ட வீரத்தாய் குயிலியின் நினைவைப் போற்றும் வகையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படவிருக்கும் வளாகத்திலேயே ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதே கோரிக்கையை, இதற்கு முன்பே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த உறுப்பினர் சு.குணசேகரன் இந்த அவையில் வைத்திருக்கிறார். இவர்களின் கோரிக்கையை ஏற்று, வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு வரும் வளாகத்தில் வீரத்தாய் குயிலிக்கும் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவீரன் ஹைதர் அலி, திப்பு சுல்தான்
இதேபோன்று, மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்காக வீரமங்கை வேலு நாச்சியார் திண்டுக்கல்லுக்கு வரவழைத்து பீரங்கிகளையும், படை வீரர்களையும் வழங்கிய மாவீரன் ஹைதர் அலி மற்றும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அவரது புதல்வர் திப்பு சுல்தான் நினைவாக திண்டுக்கல்லில் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அ. சவுந்தரராசன், பாலபாரதி திப்பு சுல்தானுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகஜானந்தாவுக்கு மணிமண்டபம்
ஏழை மக்கள் உயர்வுபெற தன் வாழ்வை அர்ப்பணித்தவரும், மக்களின் அறியாமையைப் போக்க கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தி அடிகளை அழைத்து வந்து அறநெறி பரப்பியவரும், சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக பணியாற்றியவரும் ஆன சுவாமி சகஜானந்தாவுக்கு அவர் வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் முனைவர் செ.கு. தமிழரசன் கோரிக்கை விடுத்திருந்தார். இதே கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் க.பாலகிருஷ்ணன் மற்றும் ஆர்.ராமமூர்த்தி ஆகியோரும் விடுத்திருந்தனர். இவர்களுடைய கோரிக்கை யினை ஏற்று, சுவாமி சகஜானந்தா தொண்டு செய்து வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோன்று, எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2000ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தினை சிறப்பான முறையில் புதுப்பித்து, புனரமைத்திட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் முனைவர் செ.கு. தமிழரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இவரது கோரிக்கையினை ஏற்று, சென்னை, மந்தைவெளி, பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் மணிமண்டபம் புதுப்பித்து புனரமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications