பேருந்துகளை தாக்கியது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது விடுதலை சிறுத்தைகளே: ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, வடமாவட்டங்களில் நடைபெற்ற வன்முறைகளுக்குப் பாமகதான் காரணம் என்றும், இதற்கான சேதம் மதிப்பிடப்பட்டு பாமகவிடமிருந்து வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மரக்காணம் கலவரத்துக்கும், அதன்பின் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகளுக்கும் பாமகவுக்கு எந்த வகையிலும் பொறுப்பில்லை. பாமக ஒருபோதும் வன்முறை பாதையைக் கையில் எடுத்தது கிடையாது.
மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருந்தால், வடமாவட்டங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட விடுதலைச் சிறுத்தைகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் வாய்ப்பே கிடைத்திருக்காது.
ஆனால், அதைச் செய்ய மறுத்துவிட்ட தமிழக அரசு, நீதி கேட்டு போராடச் சென்ற என்னை (ராமதாஸ்) விழுப்புரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு பஸ்கள் மீது கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச் சொத்துகளையும், தனியார் சொத்துகளையும் சேதப்படுத்துதல், மரங்களை வெட்டிச் சாய்த்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை விடுதலைச் சிறுத்தைகள்தான் அரங்கேற்றினர். இவையெல்லாம் தெரிந்தும், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதில் பாமக மீது பழி போடும் முயற்சியில் காவல் துறையுடன் இணைந்து தமிழக அரசும் ஈடுபட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
பாமகவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் குண்டர் சட்டத்திலும் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவ்வளவு பேர் மீது தடுப்புக் காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.
தமிழக அரசின் இந்த அடக்குமுறைகளை எதிர்த்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நீதிமன்றத்தில் பாமக வழக்குத் தொடர உள்ளது. முதல்வர் ஜெயலலிதா தமது அதிகார எல்லையை மறந்து பாமகவைத் தடை செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார்.
எந்தவொரு அரசியல் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உண்டு. தமிழக அரசின் அனைத்து அடக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும் பாமக சட்டப்படி எதிர்கொள்ளும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications