மக்களை தண்ணீரின்றி 4 நாள் தவிக்க விட்ட வாட்டர் கேன் நிறுவனங்கள்... அரசு நடவடிக்கை எடுக்குமா?
சென்னை: மனிதனின் மிக மிக முக்கிய அத்தியாவசியப் பொருள் குடிநீர்தான். அந்தக் குடிநீரை நிறுத்தி வைத்து கிட்டத்தட்ட 3 மாவட்ட மக்களை ஸ்தம்பிக்க வைத்து விட்டனர் அழுக்குப் பிடித்த கேன்களில் தண்ணீரை நிரப்பி விற்கும் தண்ணீர் நிறுவனங்கள்.
இவர்களின் இந்த 4 நாள் ஸ்டிரைக்குக் காரணம் இவர்களின் நிறுவனத்தில் தண்ணீர் சுத்தமான முறையில் சுத்திகரிக்கப்படுகிறதா, கேன்களில் அடைக்கப்படுகிறது, கேன்கள் சுத்தமாக உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தியதுதான். அப்படி இல்லாத நிறுவனங்களை அதிகாரிகள் சீல் வைத்ததால் கோபம் பொத்துக் கொண்டு தண்ணீர் விற்பனையை நிறுத்தி விட்டனர் இந்த தண்ணீர் வியாபாரிகள்.
மக்கள்தான் பாவம் செத்துப் போய் விட்டார்கள். இவர்கள் கொடுக்கும் தண்ணீரை மட்டுமே வாங்கி பயன்படுத்தி வருவோர்தான் 90 சதவீத மக்கள். எனவே தண்ணீர் இல்லாமல், தவித்துப் போய் விட்டனர் அப்பாவி மக்கள்.

4 நாட்களாக மக்கள் பட்ட அவதி
கடந்த நான்கு நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கேன் வாட்டர் விற்பனையாளர்கள் ஸ்டிரைக் செய்து வந்தனர்.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தரமற்ற குடிநீரை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது.

130 நிறுவனங்களுக்கு உத்தரவு
இதையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தனது அனுமதி பெறாமல் தண்ணீர் விற்பனை செய்து வந்த 130 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் விட்டது.

103 நிறுவனங்களுக்கு மின் விநியோகம் துண்டிப்பு
மேலும் 103 நிறுவனங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தி மின் இணைப்பைத் துண்டித்தனர். நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

பொத்துக் கொண்டு வந்த கோபம்
இதனால் கோபமடைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்பட்டு குடிநீர் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டவை தண்ணீர் விற்பனையை நிறுத்தி ஸ்டிரைக்கை அறிவித்தன. வாட்டர் கேன் சப்ளை நிறுத்தப்பட்டது.

4 நாட்கள் அலையாய் அலைந்த மக்கள்
இதனால் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போனது. சொல்லாமல் கொள்ளாமல் திடீரென நடந்த இந்தசட்டவிரோத போராட்டத்தால் மக்கள் சொல்லொணா அவதிக்குள்ளானார்கள்.

அநியாய விலைக்கு கேன்களை விற்ற வியாபாரிகள்
இதைப் பயன்படுத்திக் கொண்ட கடை வியாபாரிகள் உள்ளிட்டோர் தங்களிடம் ஸ்டாக் இருந்த பழைய, அழுக்குப் பிடித்த கேன்களில் இருந்த தண்ணீரை அநியாய விலைக்கு மக்களிடம் விற்று மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்தனர்.

தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் எச்சரிக்கை
இந்த நிலையில் அரசையும், மக்களையும் பயமுறுத்தவும், மிரட்டும் வகையிலும் தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கை விஸ்தரிக்கப் போவதாக தண்ணீர் வியாபாரிகள் மிரட்டல் அறிவிப்பு விடுத்தனர்.

திடீர் வாபஸ்
ஆனால் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபமும், அதிருப்தியும் வெடிக்க ஆரம்பித்ததை உணர்ந்த தண்ணீர் வியாபாரிகள், அரசின் அதிரடி நடவடிக்கையும் பாயுமோ என்ற பயத்தில் நேற்று தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றன. இரவோடு இரவாக கடைகளுக்கு தண்ணீர் சப்ளையை ஆரம்பித்தன.

விநியோகம் சீரடைந்தது
இதையடுத்து இன்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் குடிநீர் கேன்களின் விநியோகம் சீரடைந்தது.

தண்ணீர் கேன் விலை உயரும் அபாயம்
இதற்கிடையே பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவையே சாக்காக வைத்து கேன்களின் விலையை அதிரடியாக பெருமளவில் உயர்த்திட தண்ணீர் கேன் வியாபாரிகள் முடிவு செய்திருப்பதாக ஒரு பரபரப்புத் தகவல் உலா வருகிறது.

ஜெயலலிதா அதிரடியாக செயல்பட மக்கள் எதிர்பார்ப்பு
இதற்கிடையே, இந்த தண்ணீர் வியாபாரிகளின் கொட்டத்தை அடக்கி, மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட அதேசமயம், குறைந்த விலையில் தண்ணீர் கேன்கள் கிடைக்க முதல்வர் ஜெயலலிதா உறுதியான, அதிரடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications