இந்தியாவில் வாழும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை....: கருணாநிதி கோரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி- பதில் பாணியிலான அறிக்கை விவரம்:
கேள்வி: 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கக்கூடிய முக்கிய மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப்போவதாக சொல்லப்படுகிறதே?
பதில்: அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து மசோதா தயாரிக்கப்பட்டு, அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்திருந்தார்கள். நீதித்துறை உறுப்பினர்கள் அதைப் பரிசீலித்தபோது, மசோதாவுக்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் விழுந்திருக்கின்றன. 8 வாக்குகள் அதிகம் பெற்று மசோதா நீதித்துறை குழுவின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. அடுத்தகட்டமாக இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்கு செல்லும். 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 60 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று மசோதா நிறைவேற வேண்டும்.
தற்போது அமெரிக்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடிவு செய்திருப்பதைப்போல, இந்தியாவிலும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையினை - நிரந்தரமாக பாதுகாப்போடு வாழ்வதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்கிட முன்வர வேண்டும் என்பது தான் நமது விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.இங்குள்ள ஈழத் தமிழர்களில், விரும்புவோர்க்கு குடியுரிமை வழங்குவது, அவர்களது எதிர்காலத்திற்கு நாம் தருகின்ற உத்தரவாதமாக அமையும் என்று கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications