கருணாநிதி பேரன் என்று கூறி பல கோடி மோசடி செய்த நடிகை லீனாவின் காதலனுக்கு போலீஸ் வலை
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் என்று கூறி பலரிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த நபரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
பாலாஜி என்ற சேகர் ரெட்டி தன்னை திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் என்று பலரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் சிலரிடம் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறியுள்ளார். விலை உயர்ந்த கார்களில் வருவது, அவரது தோரணையைப் பார்த்து பலரும் அவர் கூறியது உண்மை என்று நம்பியுள்ளனர். பல முதலீட்டாளர்கள் பாலாஜி நடத்தி வரும் தொழில்களில் முதலீடும் செய்துள்ளனர். அவர் இதை பயன்படுத்தி வங்கியில் ரூ.19 கோடி கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
அவர் நடிகை லீனா மரியா பாலுடன் வாழ்ந்து வந்துள்ளார். மோசடி வழக்கில் லீனா கைது செய்யப்பட்டுள்ளார். பாலாஜி மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமியின் நெருங்கிய நண்பர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து பெங்களூரில் ரூ.1 கோடிக்கும் மேல் நில மோசடி செய்திருக்கின்றனர். இது தவிர பாலாஜிக்கு டி.ஆர். பாலு, கருணாகர ரெட்டி உள்ளிட்ட பல அமைச்சர்களின் மகன்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
பாலாஜியிடம் ஏமாந்தவர்களில் ஒருவர் அளித்த புகாரின்படி தான் போலீசார் அவர்களை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பாலாஜி தலைமறைவாகிவிட்டார். ஆனால் அவரின் காதலி லீனா கைது செய்யப்பட்டார். லீனா அரசு கான்டிராக்ட்கள் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ. 76 லட்சம் மோசடி செய்ததை டெல்லி மற்றும் சென்னை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
பாலாஜி மற்றும் லீனாவிடம் ஏமாந்த டெல்லியைச் சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் அவர்கள் இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அவர்களுக்கு சென்னையில் நடந்த 2 மிகப்பெரிய நிதி மோசடிகளில் தொடர்பு உள்ளது. அவர்கள் கடந்த 1 மாதத்திற்கு முன்பு தான் டெல்லி சென்றுள்ளனர்.
அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து பல சொகுசு கார்கள், 81 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தமிழ் நடிகர் மகேந்திரா என்பவர் நண்பர் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications