மாவோயிஸ்டுகளின் 'மே 25' தாக்குதலுக்கு 4 காங்கிரஸ் தலைவர்கள் உடந்தை: என்.ஐ.ஏ.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 25ந் தேதி நடத்தப்பட்ட மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட 28 பேர் பலியாகினர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் தாக்குதல் நாளில் 4 முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த 4 தலைவர்களும்தான் காங்கிரஸ் நடத்திய யாத்திரையின் பாதை குறித்த விவரங்களை மாவோயிஸ்டுகளுக்குத் தெரிவித்து வந்துள்ளனர்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட 4 தலைவர்களின் தொலைபேசி அழைப்புகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகிக்கு இத்தாக்குதலில் தொடர்பு இருக்கிறது என்று மத்திய பிரதேச பாஜகவினர் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி நடத்தும் ராமன்சிங் தலைமையிலான அரசு காங்கிரஸின் பரிவர்த்தன் யாத்திரைக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடந்து இருக்காது என்று அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது..மேலும் அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 39 பேரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநில பாஜக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒட்டுமொத்தமாக அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்வது எனவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications