கொலையாளிகள், கொள்ளையர்களை விட்டுவிட்டு எதிர்கட்சியினரை போலீசார் கைது செய்கின்றனர்: விஜயகாந்த்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேமுதிகவைப் பழி வாங்குவதற்கு காவல்துறையை தனது ஏவல் துறையாக ஆளுங்கட்சி பயன்படுத்தி வருகிறதோ என்ற எண்ணம் எழக்கூடிய வகையில் தேமுதிக தொண்டர்கள் மீது பொய்யான புகார்களைப் பெற்று குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை ஏவிவிட்டு, தொண்டர்கள் மத்தியில் ஓர் அச்சத்தை உருவாக்கி தேமுதிகவின் செயல்பாடுகளை முடக்கிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது.
உதாரணமாக, திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் கோதை எஸ். மாரியப்பன் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சி இருக்கிறார்கள். அவர் அந்த பகுதியில் பிரபலமான தொழில் அதிபர். அவரது மனைவி, மகள்கள், மருமகன்கள் எல்லோருமே மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை ஆற்றி வருகிறார்கள். அவர் மீது இதுவரை எந்த காவல் நிலையத்திலும், எந்த வழக்கோ, புகாரோ கிடையாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
மேலும் திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தில் நெல்லைப் பகுதி செயலாளர் மகாராஜன், துணை செயலாளர் கணேசன், வார்டு செயலாளர் முருகன் மற்றும் துரை ஆகிய நால்வர் மீதும் பொய்யான புகாரைப் பெற்று வழக்கு தொடுத்து கைது செய்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்களை கைது செய்வதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, எதிர்க்கட்சி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு காவல்துறை செயல்படுமேயானால், பிற்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கு, இதுவே ஒரு முன்னுதாரணமாக மாறி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் போக்கு அதிகரிப்பதற்கு வழி வகுத்து விடாதா? எனவே இதுபோன்ற நிகழ்வுகளை கைவிட்டு விட்டு, காவல்துறை சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications