13 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது: வீடு திரும்பிய டாக்டர் வெங்கடேஷ்
சென்னை: சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா. அவரது அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ். சென்னை ஆழ்வார்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றார்.
இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளராக ஜெயலலிதா நிமித்தார். பின்பு 2010 ம் வருடம் அந்த பொறுப்பில் இருந்து டாக்டர் வெங்கடேஷ் அதிரடியாக நீக்கப்பட்டார்.
தஞ்சை அருகே விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை சேதப்படுத்தியதாகக் கூறி டாக்டர் வெங்கடேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து அவரது சார்பில் அவருடைய வழக்கறிஞர் வடிவேல் தஞ்சை இரண்டாவது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதை கடந்த 6 ம் தேதி விசாரித்த மாஜிஸ்திரேட் மூர்த்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் டாக்டர் வெங்கடேஷ் சார்பில் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி சேது மாதவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான விசாரணையை ஜூன் 10 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் 13 நாள் சிறைவாசத்தை முடித்துக் கொண்டு சென்னை சென்றார்.












Click it and Unblock the Notifications