ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி முறிந்தது - 19ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் நிதீஷ்

நிதீஷ் குமார் வீட்டில் கூட்டம்
முன்னதாக நிதீஷ் குமார் வீட்டில் ஐக்கிய ஜனதாதள தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடியது. அதில் பாஜக கூட்டணியை முறி்த்துக் கொள்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் நிதீஷ் குமார். இதில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. புறக்கணித்து விட்டனர்.
இதுகுறித்து மூத்த பாஜக தலைவர் மங்கள் பாண்டே கூறுகையில், கூட்டணி குறித்து முதல்வர் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் போய் என்ன புண்ணியம் என்றார்.
ஆளுநருடன் சந்திப்பு
இக்கூட்டத்திற்குப் பின்னர் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார் நிதீஷ் குமார். அங்கு ஆளுநர் யஷ்வந்த் ராவ் பாட்டீலைச் சந்தித்து பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது தொடர்பான விளக்கத்தை அவர் அளித்தார்.
மேலும் தனது அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் ஆளுநரிடம் தெரிவித்தார்.
பாஜக அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்க
ஆளுநரை சந்தித்தபோது தனது அமைச்சரவையில் உள்ள 11 பாஜக அமைச்சர்களையும் டிஸ்மிஸ் செய்யுமாறு நிதீஷ் குமார் கேட்டுக் கொண்டாராம். மேலும், பீகார் சட்டசபையில் புதன்கிழமையன்று தனது பெரும்பான்மை பலத்த நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும், அன்றைய தினம் சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டாராம்.
சிறுபான்மை அரசானது
பாஜகவுடன் கூட்டணியை முறித்ததால், நிதீஷ் குமார் அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. அங்கு பெரும்பான்மைக்குத் தேவையான பலம் 122 ஆகும். ஆனால் நிதீஷ் கட்சியிடம் 118 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால் சுயேச்சை எம்.எல்.ஏக்கள் அங்கு 6 பேர் உள்ளனர். காங்கிரஸும் ஆதரவு தரும் என்று தெரிகிறது. எனவே ஆட்சி கவிழும் வாய்ப்புக்கு இடமில்லை என்பதால் நிதீஷ் குமார் தரப்பு துணிச்சலாக பாஜகவை உதறியுள்ளது.
அடுத்து சட்டசபையில் நிதீஷ் குமார் தனது அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பார்.












Click it and Unblock the Notifications